×

அதிமுக பிரச்சனை - இருவரும் ஒன்றாக இருந்து எதையாவது செய்யுங்கள்- சீமான்  

 

அதிமுக கட்சிக்குள் இருக்கக்கூடிய பிரச்சினை அவற்றை இருவரும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

மதுரை அவனியாபுரத்தில் அமைந்துள்ள பெரியார் சிலை அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் புதிதாக கட்சி கொடியேற்றப்பட்டது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கொடியேற்றினார். தொடர்ந்து அப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “அதிமுக கட்சிக்குள் இருக்கக்கூடிய பிரச்சினை அவற்றை இருவரும் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். இதைப் பற்றி என்ன பேசினாலும் பிரச்சனை தான் வரும் நான் இருவரையும் மதிக்கக்கூடியவன் அவர்களை நேசிக்கிறேன் இருவரும் ஒன்றாக இருந்து ஏதாவது பண்ணுங்கள். ஒரு சின்ன தவறு இவ்வளவு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது, இருவரும் எங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் யார் பக்கம் நிற்பது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இருவரும் கலந்துபேசி முடிவெடுக்க வேண்டும்.

பாரதிய ஜனதா கட்சி எப்போதும் பெரிய நாடகத்தை போடும். சந்திரபாபு நாயுடு மற்றும் ஒருசிலர் சேர்ந்து தான் ஐயா அப்துல் கலாமை வாஜ்பாயிடம் அறிமுகம் செய்துவைத்து குடியரசுத் தலைவராக ஆக்கினார்கள். மத்திய அரசு எத்தனை பழங்குடி மக்களை அமைச்சராக ஆகியுள்ளனர்.? பிஜேபி நாடகம் செய்து வருகிறது. வேண்டுமென்றால் திரௌபதி முரமுவை பிரதமராக அறிவியுங்கள் என்று கேள்வி எழுப்பியதுடன் பிஜேபியை நாங்கள் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோம். சகோதரத்துவம் சமத்துவத்தைப் பற்றி பேசும் பிஜேபி நாடகத்தை நடத்தி வருகிறது. அக்னிபாத் திட்டத்திற்கு உண்மையிலேயே ஆர்எஸ்எஸ் அமைப்பு தான் அவர்களின் திட்டத்திற்காக ஆட்களை எடுக்கிறது” எனக் கூறினார்.