×

டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்ட அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும்- எம்.பி. ரவீந்திரநாத்

 

புதுமைப்பெண் திட்டத்திற்கு அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் வரவேற்பு தெரிவித்துளார். பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் இத்திட்டத்தை துவக்கி வைத்த தமிழக முதல்வருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் என்றும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் வருகை தந்தார். ரோப்கார்  மூலம் மலை மீது சென்ற ரவீந்திரநாத் மாலையில் நடைபெறக்கூடிய சாய்ரச்சை பூஜையில் கலந்து கொண்டு ராஜா அலங்காரத்தில் முருகனை தரிசனம் செய்தார். பின்னர் மலை மீது  தங்கரதம் இழுத்து முருகனை வழிபட்டார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. ரவீந்திரநாத், “கல்லூரியில் படிக்கக்கூடிய பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய புதுமை பெண் திட்டத்தை வரவேற்கின்றேன். இது போன்ற திட்டங்கள் பெண்களின் உயர்கல்வி படிப்பை ஊக்குவிக்கும். திட்டத்தை துவக்கி வைத்த தமிழக முதல்வருக்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற டிடிவி தினகரன், சின்னம்மா உள்ளிட்ட  அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என்பது தங்களது ஒருங்கிணைப்பாளரின் கருத்து அதுவே தனது கருத்து, வரக்கூடிய தேர்தலை அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரும் இணைந்து சந்திக்க வேண்டும்” என தெரிவித்தார்.


--