×

பொன்னையன் ஆடியோ போல் இன்னும் பல ஆடியோக்கள் விரைவில் வரும்-புகழேந்தி

 

அதிமுக தொண்டர்களின் உயிர்களை மு.க.ஸ்டாலின் அரசுதான் காத்துள்ளது இதை சொல்வதற்கு எங்களுக்கு எந்த கவலையும் இல்லை என ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி தெரிவித்துள்ளார். 


சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் புகழேந்தி மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய புகழேந்தி, “பொன்னையன் ஆடியோ போல் விரைவில் இன்னும் ஆடியோக்கள் வெளிவரும். பல ஆடியோக்களை ஒவ்வொன்றாக விரைவில் வெளியிட உள்ளோம். ஓபிஎஸ் விரைவில் புரட்சி பயணம் மேற்கொள்ளவுள்ளார், அவர் புரட்சி பயணம் மேற்கொள்ளும் போது எடப்பாடி பழனிசாமி உட்பட அவர்கள் பக்கம் உள்ள அனைவரும் சிறையில் இருப்பார்கள்.என்னதான் இருந்தாலும் பொன்னையன் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து உடன் இருந்தவர். பொன்னையன் நாங்கள் என்னவெல்லாம் சொல்ல நினைத்தோமோ அதையெல்லாம் தெளிவாக சொல்லிவிட்டார்.

எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் அவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர். எனவே பொன்னையனுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம். எங்களுக்கு திருநெல்வேலி அல்வா குடுக்கலாம் என்று நினைத்தீர்கள் ஆனால் நாங்கள் நேற்று முன்தினம் உங்களுக்கு அல்வா குடுத்து விட்டோம். கே.பி.முனுசாமி பச்சை துரோகி. பொன்னையனுக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்கினால் இன்னும் பல உண்மைகள் வெளியே வரும். தைரியாம மற்றவர்களும் வெளியில் வந்து உண்மையை சொல்வார்கள்.  பொன்னையன் தெளிவாக அனைத்து உண்மைகளையும் சொல்லி விட்டார், ஜாதி வெறி அதிமுகவை ஆட்டி படைக்கிறது. ஓ.பி.எஸ் காலை பிடித்து வளர்ந்தவர் கே.பி.முனுசாமி. தர்மயுத்தத்தை வைத்து தான் மீண்டும் அதிமுகவுக்கு வந்தார். ஆனால் இன்று ஓ.பி.எஸ் யை திட்டுகிறார். கே.பி.முனுசாமி ஒரு பச்சை துரோகி பொதுக்குழுவில் அனைவரும் சரமாரியாக ஓபிஎஸ்ஐ வசைபாடி உள்ளார்கள். வசைபாடுவது ஒரு பொது குழுவா? மேடையிலேயே ஜாதி வெறியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். 1500 க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஓ.பன்னீர் செல்வத்தை அழைத்து பேச ஆரம்பித்து விட்டனர். பொய் சொல்லி எங்களை பொதுகுவுக்கு அழைத்து வந்து விட்டனர் என புலம்புகிறார்கள். அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் யாரும் எங்களை தாக்கவில்லை. 7 மாவட்ட செயலாளர்கள் 200 ரவுடி பட்டாளதை கூட்டி வந்து எங்களை தாக்கி உள்ளார்கள். ஒரு வாரத்திற்கு முன்பே திட்டம் தீட்டி வந்து தங்கி இருந்து எங்களை கடுமையாக தாக்கி உள்ளார்கள்.

நீதிமன்றம் செய்தது தவறு. என்ன அவசரம் ஏன் அலுவலகத்தை பூட்டினார்கள் காவல் துறையினர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் 20 பிணத்திற்கு மேல் விழுந்திருக்கும், மு.க.ஸ்டாலின் அரசுதான் எங்களது பல பேரின் உயிர்களை காப்பாற்றியுள்ளது. இதை சொல்வதற்கு எனக்கு எந்த கவலையும் இல்லை. எடப்பாடி பழனிச்சாமியை இனிமேல் முன்னாள் அதிமுக உறுப்பினர் என்று தான் சொல்ல வண்டும். அவரை ஒ.பன்னீர் செல்வம் நீக்கி விட்டார். ஜெயலலிதா பொதுச் செயலாளராக பொறுப்புக்கு யாரும் தகுதி இல்லை என ஓபிஎஸ் தெளிவாக சொல்லி இருக்கிறார்” எனக் கூறினார்.