×

எடப்பாடி பழனிசாமி கூட்டத்துக்கு பணம் கொடுத்து ஆட்களை கூட்டிவருகிறார்- புகழேந்தி

 

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லம் வெளியே அவரது ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது பேசிய அவர், “கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களுக்கு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் இணைந்து கையெழுத்து போட்டுள்ளனர். எனவே எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்து விட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட தயாரா? பன்னீர் செல்வம் கோஷ்டியால் கட்சியின் அனைத்து மாவட்டத்திலும் கூட்டம் நடத்த முடியுமா? எடப்பாடி பழனிச்சாமி விலைவாசி கூட்டத்திலும் ஒபிஎஸ்ஸை பற்றிதான் பேசி வருகிறார்.

பண்ருட்டி ராமச்சந்திரன் எம்.ஜி.ஆரோடு பழகியவர். அவர் ஒரு பழம்பெரும் தலைவர் என்பதற்கு என் கையில் உள்ள படம் தான் சாட்சி. அவர் ஒபிஎஸ்ஸிக்கு ஆதரவு அளித்துள்ளார். இதை எடப்பாடியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் அறிவுரை தேவையில்லை என்கிறார். அரசாங்கத்தை விமர்சிப்பதை விட்டு விட்டு எங்களை எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் கூட்டத்திற்கு பணம் கொடுத்து ஆட்களை கூட்டி வருகிறார்கள். கட்சியின் உண்மையான தொண்டர்கள் அவர் பக்கம் இல்லை. பண்ருட்டி ராமச்சந்திரன் பற்றி எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” எனக் கூறினார்.

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவையே விமர்சித்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன், அதன்பிறகு பாட்டாளி மக்கள் கட்சிக்கு சென்று சட்டமன்ற உறுப்பினராகி யானையின் மீது சென்றார். அதன்பிறகு தேமுதிகவிற்கு சென்றுவிட்டார். உங்களது அறிவுரை எனக்கு தேவையில்லை. தயவு செய்து குறை கூறாமல் இருங்கள், இல்லையென்றால் சென்றுவிடுங்கள். நீங்கள் கட்சியின் கிளை செயலாளராக இருப்பதற்கு கூட தகுதியற்றவர் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார்.