×

ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு... இயக்குநர் பா.ரஞ்சித் மீதான வழக்கு ரத்து!

 

திருப்பனந்தாளில் நீலப்புலிகள் இயக்க நிறுவன தலைவர் உமர்பாரூக்கின் நினைவு நாள் பொதுக்கூட்டம் 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துகொண்டு பேசுகையில், "டெல்டா பகுதியில் சாதிய கொடுமைகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன. ராஜராஜ சோழன் காலம்தான் பொற்காலம் என்பார்கள். ஆனால், ராஜராஜ சோழன் ஆண்ட காலம்தான் இருண்ட காலம் என இந்த மண்ணிலிருந்து சொல்கிறேன். ராஜராஜ சோழன் என்னுடயை சாதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை” என்றார்.

அவரின் பேச்சு சர்ச்சைகளை எழுப்பியது. இதையடுத்து பா.ரஞ்சித்தை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் சார்பில் திருவிடைமருதூர் டிஎஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டது. அதற்குப் பின் அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பா.ரஞ்சித் தாக்கல் செய்த மனுவில், "ராஜராஜ சோழனின் வரலாற்று குறித்து உண்மைகள் சிலவற்றை குறிப்பிட்டேன். 

நிலமற்ற மக்கள் நடத்தப்பட்ட விதம் குறித்த உமர் பாரூக்கின் ‘செந்தமிழ் நாட்டு சேரிகள்’ எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளவை குறித்தும் பேசினேன். பல்வேறு சமூக சீர்திருத்தவாதிகளும் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் ஒடுக்கப்பட்ட மக்களின் கற்காலம் என குறிப்பிட்டுள்ளனர். தேவதாசி முறை அவரது ஆட்சிக் காலத்தில் அதிகளவில் இருந்துள்ளது. பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களையே நான் குறிப்பிட்டேன். இந்த தகவலை வேறு பலரும் பேசி உள்ளனர். 

ஆனால் என்னுடைய பேச்சு மட்டும் சமூக வலைத்தளங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டு வருகிறது. நான் உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை. மேலும் எனது கருத்து, எந்த சமூகத்திற்கும் எதிராக அமையவில்லை. ஆகவே என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார். அஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார். இன்று அவர் இயக்குநர் பா.ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கை ரத்துசெய்து உத்தரவிட்டார்.