×

‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’: பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஓபிஎஸ் – ஈபிஎஸ் வேண்டுகோள்!

நிவர் புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு அதிமுகவினர் விரைந்து உதவிட வேண்டுகோள் விடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், ” தமிழகம் முழுவதும் பெருமழை பெய்து வருகிறது. வலுவான புயல் தமிழகத்தை தாக்க இருக்கிறது. இந்த இயற்கை இடர்பாடுகள் நிறைந்த சூழலில் தமிழ்நாட்டு மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு உதவிட மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு போர்க்கால அடிப்படையில் இரவு பகல் பாராமல் உழைத்து கொண்டிருக்கிறது. நிவாரணப்
 

நிவர் புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு அதிமுகவினர் விரைந்து உதவிட வேண்டுகோள் விடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில், ” தமிழகம் முழுவதும் பெருமழை பெய்து வருகிறது. வலுவான புயல் தமிழகத்தை தாக்க இருக்கிறது. இந்த இயற்கை இடர்பாடுகள் நிறைந்த சூழலில் தமிழ்நாட்டு மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு உதவிட மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு போர்க்கால அடிப்படையில் இரவு பகல் பாராமல் உழைத்து கொண்டிருக்கிறது. நிவாரணப் பணிகளிலும் மறுவாழ்வு பணிகளிலும் அரசுக்கு துணை நின்று மக்களின் துயர்துடைக்கும் தன்னார்வ பணிகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக உடன்பிறப்புகள் முழு மூச்சோடு மேற்கொள்ள வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

‘மக்களுக்காக நாம் மக்களோடு நாம்’ என்ற தாரக மந்திரத்தை கழகத்தின் இதயத் துடிப்பாக மாற்றிக்காட்டிய இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காட்டிய வழியில் தமிழ்நாடு முழுவதும் புயல் வெள்ள பாதிப்புக்கு உள்ளான நம் சகோதர சகோதரிகளுக்கு தேடிச்சென்று அவர்களின் தேவை அறிந்து பணியாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது. அந்தப் பணிகளை வழக்கம்போல மகிழ்ச்சியுடன் மனநிறைவுடனும் செய்து முடிப்போம் வாரீர். மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகள், கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் உடனடியாக களப்பணி ஆற்ற அன்புடன் கட்டளை இடுகிறோம்.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு உணவுப் பொருட்களை உடனடியாக வழங்க என்னென்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் விரைந்து செய்யுங்கள். எத்தனை வேளை உணவு என்றாலும் அவற்றை மக்கள் அனைவரும் தேவையான அளவுக்கு பெறுவதை உறுதி செய்யுங்கள். வெள்ளத்தில் ஆடைகளை இழந்தோர் அடிப்படை தேவைகளை இழந்தோர் அனைவருக்கும் கழகத்தின் அன்பு கரங்கள் விரைந்து உதவட்டும். பெய்து வரும் பெருமழையால் தாழ்வான பகுதிகளிலும், கரையோரப் பகுதிகளிலும் தண்ணீர் சூழ்ந்திருக்கும். அந்த தண்ணீரை உடனடியாக வெளியேற்ற மின் மோட்டார்கள் போன்றவற்றை பயன்படுத்தி ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.

நிலைமை சரியாக தொடங்கும் வரையில் செய்யப்படவேண்டிய மறுவாழ்வு பணிகளிலும் அக்கறை செலுத்துங்கள். நம் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை அவர்களோடு இருங்கள். அவர்களுக்கு தேவையானவற்றை கடமை உணர்வோடு திறம்பட செய்யுங்கள். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கழகத்தின் சார்பில் வழங்கப்படும் நிவாரண உதவிகள் மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டது குறித்த முழு விபரங்களை புகைப்படத்துடன் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அல்லல்படுவோருக்கு ஆற்றும் தொண்டு ஆண்டவனுக்கு செய்யும் திருப்பணி! மக்கள் தொண்டே மகேசன் தொண்டு! தன்னலம் கருதாத உழைப்போம் தமிழர் பெருமையை காப்போம்!” என குறிப்பிட்டுள்ளனர்.