ஆதரவாளர்களுடன் ஆளுநரை சந்திக்கும் ஓபிஎஸ் -இபிஎஸ் : அதிமுகவில் சலசலப்பு
எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்திருந்த நிலையில் தற்போது ஓ.பன்னீர்செல்வமும் ஆளுநரை சந்தித்து பேசியிருக்கிறார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த மாதம் கோவையில் தான் வழக்கமாக செல்லும் ஆயுர்வேத சிகிச்சை மையத்திற்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார். ஒருவாரத்திற்கு மேல் அங்கே தங்கி இருந்து அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டார். அந்த சமயத்தில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடிபழனிச்சாமி ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார்.
தனக்கு நெருக்கமான முனுசாமி, வைத்திலிங்கம், வேலுமணி, தங்கமணி ஆகியோருடன் சென்று சந்தித்திருந்தார். ஓபிஎஸ்க்கு தெரியாமல் எடப்பாடி ஆளுநரை சந்தித்ததாக அதிமுகவிற்குள் அப்போது சலசலப்புகள் எழுந்தன.
இந்த நிலையில் நேற்று தனக்கு நெருக்கமான ஜேசிடி பிரபாகரனுடன் சென்று ஆளுநரை சந்தித்து பேசியிருக்கிறார் ஓபிஎஸ்.
இன்று எம்.ஜி.ஆர். மாளிகையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கின்ற நிலையில் நேற்று தனிப்பட்ட முறையில் ஆளுநரை ஓபிஎஸ் சந்தித்திருப்பது அதிமுகவிற்குள் சலசலப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.