×

"மத்திய அரசுடன் எப்படி இணக்கமாக செல்வது?"  - முதல்வருக்கு கிளாஸ் எடுத்த ஓபிஎஸ்!

 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் மட்டும் 7,000 கிமீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைக பணிகள் மத்திய அரசின் நிதி வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இப்பணிகளை மேம்படுத்துவதில் தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்பு இல்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவிப்பதும், ஒத்துழைப்பு தருவதாக முதல்வர் பதிலளிப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. அண்மையில் அமைச்சர், தமிழகத்தில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட தமிழ்நாடு அரசின் அனுமதி பெறுவது என்பது மிகக் கடினமாக இருப்பதாகவும் கூறினார்.

இவையெல்லாம் அதிகாரிகள் மட்டத்தில் தீர்க்கப்படவேண்டிய ஒன்று என்றும், அதிகாரிகள் அது குறித்து முடிவு எடுத்து தெரிவிக்காததன் காரணமாக அந்தப் பணிகள் எல்லாம் நிறுத்தப்பட்டு உள்ளன என்றும் தெரிவித்தார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் ஒத்துழைப்பின் பேரில் அனைத்துச் சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு உடனடியாக தயாராக இருப்பதாகவும் கூறினார். மத்திய அமைச்சர் இந்த அளவுக்கு வருத்தப்பட்டு சொல்வதைப் பார்க்கும்போது, திமுக அரசு விழிப்புடன் செயல்படவில்லையோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுகின்றது.

 

தமிழகத்தின் வளர்ச்சி என்பது மாநில அரசின் நிதி, மத்திய அரசின் வரிப் பகிர்வு, மத்திய அரசின் நிதியுதவி, வங்கிகளிலிருந்து பெறப்படும் கடன் அனைத்தையும் உள்ளடக்கியது. இச்சூழலில் மத்திய அரசிடமிருந்து அதிக நிதியைப் பெற்று தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றுவதுதான் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் நன்மை பயப்பதாகும். அரசியலை புறந்தள்ளிவிட்டு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதிமுக ஆட்சிக் காலத்தில் முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டதால்தான் பல்வேறு திட்டங்கள் தீட்டிச் செயல்படுத்தப்பட்டன. 

இதுதான் கூட்டாட்சித் தத்துவத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு.  அதைவிடுத்து, தமிழ்நாட்டிற்கான வளர்ச்சித் திட்டங்களில், தமிழக மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களில் ஒத்துழைப்பு அளிக்காமல் இருப்பது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. மாறாக கடும் கண்டனத்திற்குரியது. இவ்வாறு செய்தால், தமிழ்நாட்டிற்காக ஒதுக்கப்படுகின்ற நிதி மற்ற மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்கும் சூழ்நிலை உருவாகும். இது தமிழ்நாட்டின் வளர்ச்சியை, கட்டமைப்புகளை பின்னோக்கித் தள்ளுவதற்குச் சமம்.

மத்திய அமைச்சரின் கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் கடிதம் எழுதியுள்ள முதல்வர் அனைத்துப் பணிகளையும் விரைவுபடுத்த தமிழ்நாடு அரசு ஒத்துழைக்கும் என்று கூறியிருக்கிறார். இது ஓரளவுக்கு ஆறுதலை அளிக்கிறது என்றாலும், இதுபோன்ற விமர்சனங்கள் வருவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும், மத்திய அரசுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கப்படுகிறதா என்பதை அவ்வப்போது கண்காணித்து தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டுமென்றும் அதிமுக சார்பில் முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.