எட்டு வழிச் சாலைக்காக வெட்டப்படும் மரங்களுக்குப் பதில் கூடுதலாக ஒரு மடங்கு மரங்கள் வளர்க்கப்படும் என்று தமிழக சுற்றச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் கூறியிருக்கிறார்.
சென்னை – சேலம் இடையே புதிதாக எட்டு வழி சாலை அமைக்க பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். தமிழக அரசை எதிர்த்து அரசியல் கட்சிகள், இயற்கை ஆர்வலர்கள், பொது மக்கள் வழக்கு தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து எட்டு வழி சாலைத் திட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு மற்றும் மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள இந்த சூழலில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விரைவு மனுவாக விசாரிக்க வேண்டும் என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கண்டனம் எழுந்தது.
இது குறித்து தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “எட்டு வழிச்சாலை பணிகள் நடைபெறும். அதற்காக வெட்டப்படும் மரங்களுக்காக ஒரு மடங்கு கூடுதலாக மரங்கள் வளர்க்கப்படும்.
ஈரோட்டில் எட்டு பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்கான பணிகள் முடிந்துவிட்டன. ஒரு வார காலத்தில் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். கொரோனா காலத்தில் மருத்துவமனைகளில் சேரும் மருத்துவக் கழிவுகள் அனைத்தும் ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை அப்புறப்படுத்தப்படுகின்றன. மருத்துவக் கழிவுகளை அகற்ற இன்னும் பலருக்கு ஒப்புதல் அளிக்க உள்ளோம். ஒரு சில இடங்களில் இதற்கு மக்கள் எதிர்ப்பு உள்ளது. இதனால், இந்த திட்டம் தாமதமாகிறது” என்றார்.