×

ஊழலை ஒழிப்போம் என சொல்லும் மோடிக்கு கடந்த தேர்தலில் செலவு செய்ய ரூ.36,000 கோடி எப்படி வந்தது?

 

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும்  முன்னாள்மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் நடைபெற்ற முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் 78 ஆவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான திரு மணிசங்கர் ஐயர் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஊழலை ஒழிப்போம் ஊழலை ஒழிப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசிக் கொண்டிருக்கிறார். கடந்த தேர்தலில் 36,000 கோடி ரூபாய் பாரதிய ஜனதா கட்சி சார்பில் செலவு செய்யப்பட்டு நரேந்திர மோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த 36 ஆயிரம் கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது. இது ஊழல் செய்த பணம்.  இந்தியாவில் மாற்று ஆட்சியை காங்கிரசால்  மட்டுமே தர முடியும். காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ளது உண்மைதான். வலுப்படுத்துவதற்காக ராகுல் காந்தி தமிழ்நாட்டில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார்.  நமது நாடு சுதந்திரம் பெறுவதற்கு பாடுபட்டு நாட்டை  ஒருங்கிணைத்தவர் ஜவகர்லால் நேரு, அதையெல்லாம் மறைத்து மோடி நாடகமாடுகிறார். 


காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் வெளியேறுவதைப் பற்றி பயப்படத் தேவையில்லை, என்னைப் போன்ற பெரிய தலைவர்கள் நிறைய பேர் உள்ளனர். 5ஜி அலைக்கற்றை ஊழலில் சென்று கொண்டிருக்கிறது. ஊழல் இதுவரை வெளிவரவில்லை, பொறுத்திருந்து பார்ப்போம். காங்கிரஸ் கூட்டணி பிளவு பட்டுள்ளதால் 35 சதவீதம் வாக்கு வங்கி வைத்துள்ள மத்திய அரசு இரண்டு முறை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் முக்கியத்துவம் அளித்து ஈடுபட்டு வருகிறது. பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அப்போது முடிவு செய்து கொள்ளலாம்” என தெரிவித்தார்.