மீண்டும் கொரோனா…. மகனின் திருமண வரவேற்பை ரத்து செய்த மகாராஷ்டிரா அமைச்சர்..
மகாராஷ்டிராவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளதால், மகனின் திருமண வரவேற்பை அம்மாநில அமைச்சர் ரத்து செய்தார். இதனை முதல்வர் உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே ஆகியோர் பாராட்டியுள்ளனர்.
மனிதர்களின் வாழ்க்கையை புரட்டி போட்ட கொரோனா வைரஸ் பரவல் நம் நாட்டில் கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்தது. இந்த சூழ்நிலையில் மகாராஷ்டிரா உள்ளிட்ட சில பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாக கடைப்பிடிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டது.
மேலும், அடுத்த 8 தினங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தால் லாக்டவுன் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார். இந்த சூழ்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் அம்மாநில எரிசக்தி துறை அமைச்சருமான நிதின் ரவுத் தனது மகனின் திருமண வரவேற்பை ரத்து செய்தார். கடந்த 19ம் தேதியன்று நிதின் ரவுத் மகன் குனாலுக்கும், அகன்ஷாவுக்கும் திருமணம் நடைபெற்றது.
நாக்பூரில் பிப்ரவரி 21ம் தேதியன்று (கடந்த ஞாயிற்றுக்கிழமை) அவர்களது திருமண வரவேற்பு நடத்த நிதின் ரவுத் ஏற்பாடுகள் செய்து இருந்தார். ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை கணக்கில் கொண்டு, தனது மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை அமைச்சர் நிதின் ரவுத் ரத்து செய்தார். அமைச்சரின் இந்த செயலை அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவும், அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும், உத்தவ் தாக்கரேவின் மகனுமான ஆதித்யா தாக்கரேவும் பாரட்டியுள்ளனர்.