×

மசோதாவுக்கு "அணை" கட்டும் திமுக... டைம் கேட்ட மத்திய அரசு - ஒத்திவைத்த ஹைகோர்ட்!

 

2019ஆம் ஆண்டு மத்திய அரசு அணைகள் பாதுகாப்புச் சட்டத்தை மக்களவையில் நிறைவேற்றியது. அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்தச் சட்டம் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை எதிர்த்து மயிலாடுதுறை திமுக எம்பி ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், "மாநில அரசின் அதிகார வரம்பில் உள்ள அணைகள் பாதுகாப்பு தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை.

இந்தச் சட்டத்தின் மூலம் தேசிய அணைகள் பாதுகாப்புக் குழு மற்றும் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் ஆகிய இரண்டு அமைப்புகளை ஏற்படுத்தி நாடு முழுவதும் உள்ள முக்கிய அணைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்கும் வகையில் மத்திய அரசு இந்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சட்டத்தை ரத்து செய்து, சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்றப் பொறுப்பு தலைமை நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென வாதிட்டார். மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்றார். பதிலளிக்க அவகாசம் வழங்கிய நீதிபதிகள் வழக்கு விசாரணையைத் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.