×

தமிழகத்தில் பாஜக வளர வாய்ப்பே இல்லை- கே.வி. தங்கபாலு

 

தமிழகத்தில் பாஜக வளர வாய்ப்பே இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அமைப்பு தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. சேலம் மாநகர் முள்ளுவாடி கேட் பகுதியில்  உள்ள மாவட்ட  காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இன்று அமைப்பு தேர்தல் நடைமுறைகள் தொடங்கியது.அதை பார்வையிட வந்த  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், “தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கமிட்டியின் அமைப்பு தேர்தல் நடைமுறைகள் தொடங்கி உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் வாக்குச்சாவடி குழுக்கள், மாவட்ட குழுக்கள் ஒன்றிய அளவில் தேர்தல் நடைமுறைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கட்சி அமைப்பு தேர்தலில்  பங்கெடுக்க விரும்புவோர், வேட்பு மனுக்களை பெற்று, அதனை பூர்த்தி செய்து  தேர்தல் அதிகாரிகளிடம் வழங்குவார்கள். பின்னர் அவை பரிசீலனை செய்யப்பட்டு ஜனநாயக முறைப்படி தேர்தல் சுதந்திரமாக எல்லோரும் பங்கேற்கும் வகையில் நடைபெறும். இந்த தேர்தல் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாத காலத்திற்கு நடைபெறும். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி பெரிய கட்சியாக வளர வாய்ப்பே இல்லை. தேசிய கட்சியான காங்கிரஸ் தற்போது திமுக கூட்டணியில் உள்ளது. இந்த கூட்டணி மகத்தான கூட்டணி.

மக்கள் ஏற்றுக் கொண்டுள்ள கூட்டணி. பாஜக வளரும் என்று கூறுவது பகல் கனவு. அது ஒருபோதும் நடக்காது. நாட்டில் ஏழை வர்க்கம் மிகப்பெரிய கொடுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு பாதுகாப்பில்லை. பெண்களுக்கு பாதுகாப்பில்லை. கடந்த எட்டு ஆண்டுகளில் பிரதமர் மோடி கூறிய வாக்குறுதிகளில் ஒன்றும்  நிறைவேற்றவில்லை. இப்படிப்பட்ட  பல கோளாறுகளை வைத்துள்ள பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் எப்படி வளரும்?” என தெரிவித்தார்.