கே.டி.ராகவன் லீக்ஸால் மதன் கட்சியிலிருந்து நீக்கம்; யூடியூப் சானல் முடக்கம் – என்ன நடக்கிறது பாஜகவில்?
தமிழ்நாடு அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் பெருவாரியான எதிர்ப்பை சம்பாதித்து வைத்திருக்கும் பாஜகவுக்குள் நடக்கும் உட்கட்சி மோதலால் களம் தகித்துக் கொண்டிருக்கிறது. பத்திரிகையாளரான மதன் ரவிச்சந்திரன் என்பவர் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இவர் தனக்கென சொந்தமாக Madan Diary என்ற யூடியூப் சானல் வைத்து நடத்தி வருகிறார். இதனை பிரமோட் செய்ததில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் பங்குண்டு.
இந்த சானலில் நேற்று மதன் வெளியிட்ட ஹாட்லீக்ஸ் தான் தற்போதைய ஹாட் டாபிக். தமிழ்நாடு பாஜகவின் மிக முக்கிய பெரும்புள்ளியான பொதுச்செயலாளராக இருந்த கே.டி.ராகவன் பெண் நிர்வாகி ஒருவருடன் ஆபாசமாக வீடியோ காலில் பேசுவது போலவும், அவருடன் பேசிக்கொண்டே சுய இன்பம் மேற்கொண்டது போலவும் அந்த வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. கே.டி.ராகவன் மட்டுமல்லாமல் இன்னும் 15 தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளின் வீடியோவும் தன்னிடம் இருப்பதாகவும் வீடியோவில் பேசியிருந்தார் மதன். குறிப்பாக அண்ணாமலையிடம் இந்த வீடியோவை காட்டியதாகவும், அவர் தான் இணையத்தில் லீக் செய்ய சொன்னதாகவும் கூறியிருந்தார்.
ஆனால் அண்ணாமலையோ வீடியோ தொடர்பாக மதன் பேசியது உண்மை தான் எனவும், ஆனால் தான் வெளியிட சொல்லவே இல்லை என்றும் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அதேபோல ராகவன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க கட்சி நிர்வாகி மலர்க்கொடி என்பவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் ராகவனின் ராஜினாமா செய்துவிட்டார் எனவும் அண்ணாமலை அறிக்கையில் தெரிவித்தார். ராகவன் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டரீதியாக எதிர்கொள்வேன் என சூளுரைத்துள்ளார். விவகாரமான இந்த வீடியோ சுமார் 8 லட்சம் பார்வையாளர்களைக் கடந்திருந்தது.
இச்சூழலில் தற்போது மதன் ரவிச்சந்திரனின் Madan Diary என்ற யூடியூப் சானல் முடக்கப்பட்டுள்ளது. திடீரென்று முடக்கப்பட்டிருப்பதால் இதன் பின்னணியில் யார் இருப்பார்கள் என்று தெரியவில்லை. எந்தவித புகாரும் இல்லாமல் அறிவிப்பும் இல்லாமல் மதனின் சானல் முடக்கப்பட்டிருப்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. காலையில் அவரும் அவரது தோழி வெண்பா கீதையன் என்பவரும் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிருந்து நீக்கப்படுவதாக கட்சித் தலைமை அறிவித்திருந்தது. உண்மையில் தமிழ்நாடு பாஜகவுக்குள் என்ன நடக்கிறது என தெரியவில்லை என தொண்டர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.