×

ஜி.கே.வாசன் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டும்- கே.எஸ்.அழகிரி

 

ஜி.கே.வாசன் காங்கிரஸ் கட்சியில் மீண்டும்  இணைய வேண்டும், வாசனுக்கு கீழ் பணியாற்ற தயார்  என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.


மதுரை காளவாசல் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார். காங்கிரஸ் கட்சியில் இணைந்த மாற்ற கட்சியினருக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “காங்கிரஸ் கட்சியை மூப்பனார் ஒரு குடும்பமாக நடத்தினார். காமராஜருக்கு பிறகு காங்கிரஸ் கட்சியை வழிநடத்தியவர் மூப்பனார். இன்றும் தமிழகத்தில் தேசிய இயக்கம் என்று சொன்னால் காமராஜரும், மூப்பனாரும் மட்டுமே நினைவுக்கு வருவார்கள். காங்கிரஸ் கட்சியை விட்டு மூப்பனார் விலகவில்லை. அன்றைக்கு இருந்த காங்கிரஸ் கட்சி தலைமை சில தவறான முடிவுகளை அரசியல் ரீதியாக எடுத்தனர். அதனால் மூப்பனாருக்கு தனிப்பட்ட பாதிப்பு எதுவும் இல்லை. அரசியல் ரீதியான முடிவுகளை எடுத்தபோது மூப்பனார் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும், சோனியாகாந்திக்கு ஆதரவாகவும் இருந்தார்.

தனிமனிதர்களை பெரியதாக தமிழ்மாநில காங்கிரஸ் நினைக்கிறார்கள். தனிமனிதர்களை பெரிய நபராக நினைப்பதால் தான் தமிழ் மாநில காங்கிரஸ் சிரமப்படுகிறது. அன்புத்தலைவரான ஜி.கே.வாசன் இந்திய தேசிய காங்கிரசில் இணைய வேண்டும். உங்களுக்கு கீழ் இருந்து நாங்கள் பணியாற்றுகிறோம். அதில் எனக்கு கருத்து வேறுபாடு கிடையாது. காங்கிரஸ் என்பது மிகப்பெரிய விருட்சம்” என உருக்கமாக பேசினார்.