×

“பதவிக்காக ஈபிஎஸ் யாரை வேண்டுமானாலும் கொலை செய்வார்”

 

எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உருட்டு கட்டை, பாட்டில் போன்ற ஆயுதத்துடன் பல ரவுடிகளை களம் இறக்கி எங்கள் மீது  தாக்குதல் நடத்திவிட்டு தாங்கள் தாக்கியதாக பொய் குற்றச்சாட்டு வைக்கின்றன என ஒபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். 

சென்னை பசுமைவழிச் சாலையில்  உள்ள ஒ.பன்னீர்செல்வம் இல்லத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோவை செல்வராஜ்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இன்று கட்சியின் அனுமதி இன்றி நடைபெற்ற பொதுக்குழு என்ற பெயரில் ஒரு கூட்டத்தை நடத்தினர்.முன்கூட்டியே ஈபிஎஸ் தரப்பில் உருட்டு கட்டை பாட்டில் போன்ற ஆயுதத்துடன் பல ரவுடிகளை களம் இறக்கி எங்கள் மீது தாக்குதல் செய்து பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ரவுடிகளையும், பணத்தையும் வைத்து கட்சியை நடத்துகிறார் எடப்பாடி பழனிசாமி. ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் ஒ.பன்னீர்செல்வத்தின் பின்னால் தான் இருக்கின்றனர்.

பதவி நிலைப்பதற்கு யாரை வேண்டுமானாலும் ஈபிஎஸ் கொலை செய்வார். அவர் அதிமுகவிற்கு தேவையில்லாத நபர். நிரந்தர பொதுச்செயலாளர் அம்மாதான் என்று போட பட்ட தீர்மானத்தை ரத்து செய்து இன்று தீர்மானம் கொண்டு வந்து இருக்கிறார்கள். இது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு செய்த துரோகம்” என்றார்.