பா.ஜ.க-வுக்கு ஆட்டம் காட்ட நினைக்கும் கிஷோர்… தி.மு.க-வுக்கு தண்ணி காட்ட நினைக்கும் சுனில்… ஜெயிக்கப்போவது யாரு?
பாரதிய ஜனதா கட்சி தன்னை ஏமாற்றிய கோபத்தில் அதை பழிவாங்க நினைக்கும் பிரஷாந்த் கிஷோரும் தி.மு.க தன்னை கழற்றிவிட்டதால் அதை பழிவாங்க துடிக்கும் சுனிலும் மோதும் ஆட்டத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்று தி.மு.க, அ.தி.மு.க-வினர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரஷாந்த் கிஷோரின் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் சுனில். நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தல்களில் பிரஷாந்த் கிஷோருடன் பணியாற்றிய சுனில் அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக ஒரு நிறுவனத்தை தொடங்கி நடத்திவந்தார். அவரை தி.மு.க அணைத்துக்கொள்ளவே, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்காக வேலை பார்த்தார் சுனில். இந்த நிலையில் தி.மு.க பக்கம் பிரஷாந்த் கிஷோர் சாய்ந்ததால் இதுவரை தேர்தல் பணிகளை கவனித்து வந்த சுனில் வெளியேற்றப்பட்டார்.
இதனால் பிரஷாந்த் கிஷோர் மீது தி.மு.க-வினர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. தி.மு.க மாவட்டச் செயலாளர்களுக்கும் ஐபேக் ஊழியர்களுக்கும் இடையே மோதல் கிளம்பியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. நடந்து முடிந்த தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூட இது பற்றி பலரும் புகார் வாசித்ததாகவும், தமிழகத்தைவிட மேற்கு வங்கம் மம்தா பானர்ஜிக்குத்தான் பிரஷாந்த் கிஷோர் முக்கியத்துவம் தருகிறார். எனவே, அவர் நமக்கு வேண்டாம் என்று தலைமையிடம் குறைபட்டுக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.
அதே நேரத்தில் அ.தி.மு.க-வில் சுனிலுக்கு ராஜ மரியாதை வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சுனிலின் தேர்தல் வியூகம் அ.தி.மு.க-வுக்கு மீண்டும் ஆட்சி அதிகாரம் கிடைக்க வழி வகுக்கும் என்று அ.தி.மு.க-வினர் முழுமையாக நம்புகின்றனர். பிரஷாந்த் கிஷோர், சுனிலைத் தாண்டி தேர்தல் முடிவை தீர்மானிக்கப் போகிறவர்கள் மக்கள்தான். இது தெரியாமல் சுனிலா, கிஷோரா என்று சின்னப்பிள்ளை சண்டைபோட்டு வருகின்றன கழகங்கள் என்று மற்ற கட்சிகள் முகம்சுழிக்கின்றன. பா.ஜ.க-வை தமிழகத்திலும் பிரஷாந்த் கிஷோர் பழி தீர்ப்பாரா அல்லது தி.மு.க-வை பழிதீர்க்க வேண்டும் என்ற சுனிலின் எண்ணம் ஜெயிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!