×

உட்கட்சி பூசலால் அதிமுக வரலாறு காணாத தோல்வி- கே.சி.பழனிசாமி

 

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த கே.சி.பழனிசாமி, “இதற்கு முன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கூட தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும் அடுத்தடுத்த தேர்தலில் வெற்றிப்பெற்றனர், ஆனால் ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுக ஆட்சியில் இருந்தபோது எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பிறகு சந்தித்த ஊரக உள்ளாட்சி, 2019 நாடாளுமன்றம், 2021 சட்டமன்ற தேர்தல் என அடுத்தடுத்த தேர்தலில் தொடர் தோல்வி.

அதிமுக கட்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலையீடு உள்ளது. அதிமுக பற்றி பேசுவதற்கு அண்ணாமலை யார்? திமுக மத்தியில் ஆட்சி அமைக்க தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக உருவெடுத்து பயணித்து வரும் நிலையில், எம்.ஜி.ஆர்., கொண்டு வந்த பைலாவை, கொள்கையை செயல்படுத்த பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், மிகப்பெரிய ஆளுமையாக திமுகவை , ஸ்டாலினை கொண்டு வர பிரதமரே வழிவகுப்பதாக அமையும்.

கட்சியில் இருந்து நீக்கிய அனைவரையும் மீண்டும் சேர்த்து, எடப்பாடி ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்க வேண்டும்.  ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பெரியளவில் அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கை இல்லை. உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடிக்கு நல்ல தீர்ப்பு கொடுத்திருக்கலாம்,  மக்கள் மன்றத்தில் வெற்றிப்பெற தேர்தலில் வெற்றிப்பெற வேண்டும். பொதுக்குழுவையும், இரட்டை தலைமையை கலைத்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் ஓராண்டிற்குள் உட்கட்சி தேர்தல் நடத்தி, அதிமுகவில் சீனியாரிட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்து தொண்டர்கள் தேர்வு செய்யும் வகையில் தலைமை தேர்வு செய்ய வேண்டும்.  

எடப்பாடிக்கும், ஸ்டாலினுக்கும் மறைமுக உறவு உள்ளதால் தான்    ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுப்போம் எனக் கூறி 3 ஆண்டுகளாகியும் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். 2023 நாடாளுமன்றத் தேர்தலுக்கு உள்ள 12 மாதங்களில் வலிமைப்படுத்திக்கொள்ளும் நடவடிக்கைகளில் அதிமுக ஈடுபட வேண்டும். குறுகிய காலத்திலேயே மக்களின் அதிருப்தியை பெற்ற திமுக தங்கள் மீதான ஊழல், சொன்ன தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கவே, மதவாத சக்தி, பாஜகவிற்கு எதிராக ஒன்றினைய வேண்டும் என உணர்வை தூண்டும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்.

எடப்பாடி பழனிச்சாமி உட்பட மக்களிடம் சென்று சேரும் விதமான பேச்சாற்றல் திறன் கொண்ட ஆளுமைகள் அதிமுகவில் இல்லாததும் ஈரோடு இடைத்தேர்தல் தோல்விக்கு காரணம். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் அண்ணாமலை தலையீடு இல்லாமல் பிரதமர் தடுக்க வேண்டும். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் நானே போட்டியிடுவேன்” எனக் கூறினார்.