என்னை விமர்சிக்க அவருக்கு எல்லா ஜனநாயக உரிமைகளும் உள்ளது..திக்விஜய சிங்கின் விமர்சனம் குறித்து சிந்தியா
மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திக்விஜய சிங் நேற்று முன்தினம், காங்கிரசுக்கு துரோகம் செய்தவர்களை நகரங்கள் மற்றும் கிராமங்களில் மக்கள் அனுமதி மறுத்ததால் பா.ஜ.க. பயத்தில் உள்ளது. பா.ஜ.க.வின் போலி செய்திகளுக்கு ஆதரவு கிடைக்காததால் சிவ்ராஜ் மற்றும் மகாராஜ் (ஜோதிராதித்ய சிந்தியா) இருவரும் கவலைப்படுகிறார்கள். சம்பலின் நீர் புரட்சிகரமானது, இது துரோகிகளுக்கு ஒரு பாடம் கற்பிக்கும் என தெரிவித்தார். ஜோதிராதித்ய சிந்தியாவின் இந்தூர் வருகை குறித்து திக்விஜய சிங் மறைமுகமாக தாக்கினார்.
திக்விஜய சிங்கின் விமர்சனம் குறித்து ஜோதிராதித்ய சந்தியாவிடம் செய்தியாளர்கள் நேற்று கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது: அவர் என்ன பேச விரும்புகிறாறோ அதை சொல்ல அவருக்கு அனைத்து ஜனநாயக உரிமைகளும் உள்ளது. ஜனநாயகத்தில் ஒரே ஒரு கடவுள்தான், அது மக்கள். யார் உண்மை, யார் போலி என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள். அது ஒரு ஜனநாயகம், அவர் எதைப்பற்றியும் பேசலாம். அவர் எனக்கு மூத்தவரும் கூட. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஜோதிராதித்ய சிந்தியா பா.ஜ.க.வில் இணைந்த பிறகு கடந்த திங்கட்கிழமையன்றுதான் இந்தூருக்கு முதல் முறையாக வந்தார். அவரை விமான நிலையத்தில் மாநில கேபினட் அமைச்சர் துளசி சிலாவாத், எம்.பி. சங்கர் லாவானி மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் வரவேற்றனர். ஜோதிராதித்ய சிந்தியா நேற்று பா.ஜ.க. அலுவலகத்துக்கு சென்று அங்குள்ள தனது பாட்டி விஜயாராஜே சிந்தியாவின் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார்.