×

சசிகலா ஏமாற்று வேலையில் ஈடுபடுகிறார்- ஜெயக்குமார்

 

இந்திய நீதித் துறையையும், இந்திய தேர்தல் ஆணையத்தையும் சசிகலா தொடர்ந்து அவமதித்து வருவதாக அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுகவின் பொதுச் செயலாளர் என தொடர்ந்து சசிகலா பேசி வருவதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாம்பலம் காவல் நிலையத்தில் அதிமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சசிகலா மீது புகார் மனு அளித்துள்ளதாகவும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இந்திய தண்டனை சட்டம் 420, 34 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க மாம்பலம் காவல் துறைக்கு அறிவுறுத்துமாறு, தாம் தாக்கல் செய்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.   அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் நிர்வாகிகள் என்று டெல்லி உயர்நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் உத்தரவிட்டுள்ள நிலையில், அதிமுகவின் பொதுச் செயலாளர் தாம்தான் என சசிகலா தொடர்ந்து தன்னை பிரகடனப்படுத்தி வருவது,  ஒரு ஏமாற்றும் செயல் என்றும் தனது மனுவில் தெரிவித்திருப்பதாக ஜெயக்குமார் கூறியுள்ளார்.  நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அளித்த தீர்ப்பை சசிகலா மதிக்காமல் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், இது இந்திய நீதித்துறையை தொடர்ந்து அவமதிக்கும் செயல் என்றும் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.