×

ஒற்றைத் தலைமை விவகாரம்- பாஜக தலையீடா? ஜெயக்குமார் விளக்கம்

 

அதிமுகவின் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்மகன் உசேன் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா மற்றும் சென்னை மாவட்ட செயலாளர்கள் உடன் இருந்தனர்.

அங்கி செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக அடிமட்ட தொண்டன் கூட உயர் பதவிக்கு வரும் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் அவைத்தலைவர். பொதுக்குழுவால் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ் மகன் உசேன் அவைத்தலைவராக வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சட்ட திருத்ததின் படி தான் அனைத்தும் நடைப்பெற்றது. யாரையும் அவமதிக்கும் எண்ணம் அதிமுகவிற்கு இல்லை. அதிமுகவின் உச்சபட்ச அதிகாரம் பொதுக்குழு தான். ஜூலை 11ம் தேதி கட்டாயம் ஒற்றை தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படும். ஒற்றை தலைமைக்கு ஆதரவு அளிக்காமல், நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தை நாடுவதால் ஓ.பி.எஸ்க்கு மட்டும் மன உளைச்சல் அல்ல, தொண்டர்களுக்கு தான் மன உளைச்சல். ஒற்றை தலைமை விவகாரத்தில் பா.ஜ.க தலையீடு இல்லை. எந்த ஒரு மூன்றாவது நபரின் தலையீட்டையும் ஒருபோதும் அதிமுக ஏற்காது. முதலமைச்சர் 7 ஜன்மம் எடுத்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. அதிமுகவை அழிக்க ஒருவர் பிறக்கவே மாட்டார்” எனக் கூறினார். 

ஓ.பி.எஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசியது குறித்த கேள்விக்கு, வன்முறை வன்முறைக்கு தீர்வாகாது என்றும்,அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் தொண்டர்கள் கூச்சலிட வேண்டாம் என கூறியதாகவும் தெரிவித்தார்.