அண்ணாமலையுடன் இணைகிறாரா எஸ்.பி வேலுமணி?
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையும் இழந்ததோடு, கட்சி இரண்டாகப் பிளவுப்பட்டு, மீண்டும் கஷ்டப்பட்டு ஒன்றாகியுள்ளது.
அதிலும் குறிப்பாக, எடப்பாடிக்கு எதிராக எம்எல்ஏக்களை ஒன்றிணைத்து கலகம் செய்து அது வொர்க் அவுட் ஆகாத நிலையில் மீண்டும் அவரிடமே சரண்டர் ஆனார் வேலுமணி. இருப்பினும் அவரது செயலை இபிஎஸ் மறக்கவும் இல்லை. மன்னிக்கவும் தயாராக இல்லை. இந்நிலையில் கொங்கு மண்டல அதிமுகவின் அசைக்க முடியாத சக்தியாகக் கருதப்படும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும், கட்சியின் தலைமைக்கும் இடையே சுமுகமான சூழல் நிலவவில்லை என்ற தகவல் பரவி வருகிறது. குறிப்பாக, சொந்த மாவட்டத்திலேயே கட்சி நிர்வாகிகள் சிலர் அவருக்கு எதிராக அதிருப்தி குரல்களை எழுப்ப தொடங்கியுள்ளனர். உள்ளூர் உட்கட்சி பூசல் மற்றும் விமர்சனங்களால் அப்செட்டில் இருக்கும் வேலுமணி, எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் தொடர்ந்து நீடிப்பதா அல்லது மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுப்பதா என்ற தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், அண்ணாமலையிடம் இருந்து வேலுமணிக்குத் தூதுஅனுப்பப்பட்டுள்ளது.. ஆனால் வேலுமணி இந்த அழைப்பிற்கு பச்சை கொடி காட்டவில்லை. தற்போதைக்கு அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். முதற்கட்டமாக அதிமுகவிற்குள்ளேயே இருக்கும் மனக்கசப்புகளை சரிசெய்து, தனது செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார். ஒருவேளை கட்சியின் உள்ளூர் அரசியல் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றால் மட்டுமே, அடுத்தகட்டமாக அண்ணாமலையின் ஆஃபர் குறித்துப் பரிசீலிக்கலாம் என்ற வேலுமணி தரப்பு வட்டாரத்தில் பேசப்படுகிறது