×

தமிழக அரசியல் களத்தை திசை திருப்பும் புதிரானவரா ஓ.பன்னீர்செல்வம் ?

தமிழக அரசியல் களத்தையும், அதிமுகவையும் ஒரு சேர அதிரவைப்பவர் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம். அரசியல் நிகழ்வுகள் இவரைச் சுற்றி அமைவதுபோல இருப்பது திட்டமிட்டதா அல்லது திட்டமிடாததா என குழம்பும் அளவுக்கு அவரது செயல்பாடுகள் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் நீண்ட காலமாகவே சொல்லி வருகின்றனர். பிரிந்து சென்றது- இணைவு என கடந்த கால பரபரப்புகள் அடங்கிய நிலையில், முதல்வர் வேட்பாளர் சர்ச்சையை தொடங்கினார். பின்னர், சமாதான முயற்சிகளுக்கு பிறகு தனக்கு அந்த ஆசை இல்லை என்றும், தொண்டர்களின்
 

தமிழக அரசியல் களத்தையும், அதிமுகவையும் ஒரு சேர அதிரவைப்பவர் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம். அரசியல் நிகழ்வுகள் இவரைச் சுற்றி அமைவதுபோல இருப்பது திட்டமிட்டதா அல்லது திட்டமிடாததா என குழம்பும் அளவுக்கு அவரது செயல்பாடுகள் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் நீண்ட காலமாகவே சொல்லி வருகின்றனர்.

பிரிந்து சென்றது- இணைவு என கடந்த கால பரபரப்புகள் அடங்கிய நிலையில், முதல்வர் வேட்பாளர் சர்ச்சையை தொடங்கினார். பின்னர், சமாதான முயற்சிகளுக்கு பிறகு தனக்கு அந்த ஆசை இல்லை என்றும், தொண்டர்களின் விருப்பமே என் விருப்பம் என அறிவித்து, முதல்வர் ரேஸில் தான் இல்லை என தெளிவுபடுத்தினார்.

அதன் பின்னர் கட்சி நிகழ்ச்சிகள், அரசு நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வந்த அவரைச் சுற்றி தற்போது மீண்டும் புதிய கதைகள் கட்டப்படுகின்றன. சசிகலாவுக்கு ஆதரவாக களம் இறங்க உள்ளார் என தற்போது புதிய புகைச்சல் கிளம்பியுள்ளது. வரும் ஜனவரி 9 ஆம் தேதி நடக்க உள்ள அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக குழு சேர்க்கிறார் என தகவல்கள் கசிந்து வருகின்றன. ஆனால் பன்னீர் தரப்போ இந்த வாதத்தை மறுத்து வருகிறது.

இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், ”ஆளும் கட்சியில் முக்கிய பதவியிலும், கட்சியில் முக்கிய பொறுப்பிலும் இருக்கும் ஒருவரை, புதிதாக ரஜினி தொடங்க உள்ள கட்சியில் இணைய உள்ளதாக கதை கட்டி விட்டனர். பன்னீர் எப்போதுமே அனைத்து தரப்பு ஆதரவாளர்களையும் கொண்டவர். மாற்றுக் கட்சியினரிடம்கூட மரியாதையுடனும், பக்குவமுடனும் நடந்து கொள்பவர். பொது இடங்களில் அதிர்ந்து பேசாதவர் என்கிற பிம்பம் உள்ளது. அவரிடம் உள்ள அமைதியை ஆளாளுக்கு வசதியாக பயன்படுத்துகின்றனர் என்கின்றனர். அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தாலும், ‘’ எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் அரசியல் ரீதியாக அணுக வேண்டிய அவசியமில்லை. சக மனிதர்களை மதிக்க வேண்டியது மிகவும் அவசியம்’’ என்பது பன்னீரின் வாதமாக உள்ளது.

இந்த அடிப்படையில்தான் நடிகர் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து, கட்சி தொடங்குவதற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். ரஜினி ஒரு தலைவராக உருவானால் கூட்டணி அமைக்கலாம் என சாதாரணமாக குறிப்பிட்டார், இதை சில ஊடகங்கள் ஊதி பெருக்கி கதை கட்டிவிட்டன. இதற்கு அவர் என்ன செய்ய முடியும். பொதுவாழ்க்கையில் உள்ளவர் குறித்து பலரும் பலவிதமாக பேசுவதற்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பது அழகல்ல என்பது அவருக்கு நன்றாகவே தெரியும் என்கின்றனர்.

திமுக எம்.பி. ஜகத்ரட்சகனின் மனைவி காலமானபோது அதற்கும் அஞ்சலி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அப்படியானால் பன்னீர் திமுகவுடன் சமரசம் செய்து கொள்கிறார் என அர்த்தம் எடுத்துக் கொள்ள முடியுமா ? என எதிர்கேள்வி கேட்கின்றனர்.

இதுவெல்லாம் அவரது இயல்பான குணம். அதை குறை சொல்லக் கூடாது என கூறுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன், சென்னையில் ஒரு பெண்கள் நிகழ்ச்சியில் பேசிய அவர், இரண்டரை ஆண்டுகள் ஆண்களும், மீதி இரண்டரை ஆண்டுகள் பெண்களும் முதல்வர் பதவி வகித்தால் நன்றாக இருக்கும் என ஒரு கருத்து தெரிவித்தார். இது இயல்பாக சமூகநீதி நோக்கில் சொல்லப்பட்ட கருத்து. அதை திரித்த சிலர், சசிகலாவை மனதில் வைத்து பன்னீர் இப்படி கூறியுள்ளார் என கதை கட்டினர்.

உண்மையில், ஓபிஎஸ் வெள்ளந்தியானவர். எதையும் மனதில் வைத்து பேசமாட்டார். கிராமத்தில் எப்படி இருந்தாரோ, அதே மனநிலைதான் இப்போதும் அவருக்குள் இருக்கிறது. அதனால்தான் சூழ்ச்சி அரசியலில் அவர் பலியானாலும், அவர் அதே போன்ற சூழச்சி அரசியலை செய்ததில்லை என்கிறார்கள். அதேநேரம் சுயமரியாதைக்கு பங்கம் வந்தால் அதனை எதிர்க்க எந்த எல்லைக்கும் செல்வார். இதை தமிழகம் பலமுறை பார்த்திருக்கிறது. அதனால்தான் சொல்கிறோம், பன்னீர் ஒரு புரியாத புதிர் அல்ல, அவர் வெளிப்படையான வெள்ளந்தி மனிதர். அதனால்தான், அவரைச் சுற்றி இவ்வளவு குழப்பங்கள் நடந்தாலும், மக்கள் நம்பிக்கை வைத்து அவரை எளிமையான தலைவராக பார்க்கிறார்கள் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். பொதுக்குழு, செயற்குழுவரை கொஞ்சம் காத்திருந்தால் இன்னும் தெளிவான விடை கிடைக்கும் என்றே அவர்களது வாதமாக உள்ளது. பார்க்கலாம் !