நான் ஒரு மீம்ஸ் பார்த்தேன்... போட்டுத்தாக்கும் நித்தியானந்தா
சென்னை வெள்ளம் குறித்து நித்தியானந்தா வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் சென்னையில் வெள்ளம் ஏற்படுவதற்கான காரணத்தையும் அந்த பிரச்சனை இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கும் அவர், அந்த பிரச்சினையை தீர்க்கவே முடியாது சட்டத்தால் கூட நீதிமன்றத்தால் கூட இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது எனவும் அந்த வீடியோவில் தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் பெய்த கன மழையால் சென்னை மாநகரமே வெள்ளக்காடாக காட்சியளித்தது. பல இடங்கள் தீவு போல் காட்சி அளித்தன. இதையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ .பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் , தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் அனைவரும் வெள்ள சேத பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நித்தியானந்தா இது குறித்து ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த வீடியோவில் அவர், ‘’நான் ஒரு மீம்ஸ் பார்த்தேன். சென்னையில் மழை வெள்ளம் வந்தபோது அப்போதைய முதல்வர் வேட்டியை மடிச்சு கட்டிக்கொண்டு போய் பார்க்கிறார். அடுத்த ஆட்சியில் இன்னொரு முதல்வர் வேட்டியை மடிச்சு கட்டிக்கொண்டு போய் பார்க்கிறார். அதற்கடுத்த ஆட்சியில் இன்னொரு முதல்வர் வேட்டியை மடிச்சு கட்டிக்கிட்டு போய் பார்க்கிறார். இதுல இருந்து என்ன தெரியுது? எத்தனை முதல்வர்கள் வந்தாலும் அந்த பிரச்சனை தீரவே இல்லை.
பிரச்சனை என்னன்னா.. தண்ணியோட வீட்டுல நாம வீடு கட்டுனதால நம்ம வீட்டுல தண்ணி வீடு கட்டிடுச்சு. அவ்வளவுதான்.
ஆரம்பத்துலேயே ஒழுங்குபடித்தி இருக்கணும். இவ்வளவு காலமும் குடி இருந்தாச்சு. இதை ஒண்ணும் பண்ண முடியாது. யாரையும் அப்புறப்படுத்த முடியாது. சட்டத்தால் கூட ஒண்ணும் பண்ண முடியாது. அதனால, மழை அடிக்கிற மாதிரி அடிக்கும். நாம அழுவுற மாதிரி அழுவுவோம். நிவாரணம் நடக்குற மாதிரி நடக்கும். திரும்ப அடுத்த மழை அடிக்கிறபோதும் மழை அடிக்கிற மாதிரி அடிக்கும் . நாம அழுவுற மாதிரி அழுவுவோம். நிவாரணம் நடக்குற மாதிரி நடக்கும். அவ்வளவுதான்’’என்று தெரிவித்துள்ளார்.