நீட் விலக்கு: அரசின் அனைத்து முயற்சிகளுக்கு துணை நிற்போம் - அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்..
நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக, பாஜாக, காங்கிரஸ் உள்ளிட்ட 13 கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்ட ரீதியாக நடவடிக்கை வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் நீட் தேர்வு, மாணவர்களின் மருத்துவ கனவை சிதைப்பதாகவும், அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் இருக்கிறது . கூட்டாட்சி தத்துவத்தை சீரழிப்பதாகவும் உள்ளது. மற்றும் , நீட் தேர்வு ரத்து மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் இருப்பது இறையாண்மைக்கு ஏற்புடையதல்ல உள்ளிட்ட தீர்மானங்களும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. .
இந்தக் கூட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பங்கேற்றார். அவர் நீட் தேர்வு விவகாரத்தில் அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் அதிமுக துணை நிற்கும் என்று தெரிவித்தார். மேலும் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் வரை, மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் அரசு பயிற்சி மையங்களை அதிகரிக்க வேண்டும் என்றும், மாணவர்கள் தவறான எண்ணங்களுக்கு செல்வதை தவிர்க்க உளவியல் பயிற்சிகள் அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.