×

ஓபிஎஸ்-க்கு அவைத்தலைவர் பதவி! சமாதானப்படுத்தும் ஈபிஎஸ் தரப்பு

 

ஓ.பன்னீர்செல்வத்திற்கு அவைத்தலைவர் பதவி அளிப்பதாக ஈ.பி.எஸ் தரப்பு சமாதான பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமையா, இரட்டை தலைமயா என்ற விவகாரம் கடந்த 1 வார காலமாக பற்றி எரியும் நிலையில், நாளை காலை அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடக்க இருக்கிறது. பொதுக்குழு கூட்டத்தில் இன்னும் 1 நாள் மட்டுமே இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே ஒருமித்த கருத்து இன்னும் எட்டப்படாமல் இருக்கிறது. தற்போதைய சூழலில் அதிமுகவில் உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 7 பேர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், 68 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் இருக்கின்றனர். 

கடந்த ஒரு சில தினங்களில் மட்டும் ஓ.பி.எஸ். அணியில் இருந்து 8 மாவட்ட செயலாளர் எடப்பாடி அணிக்கு தாவி உள்ளனர். எடப்பாடி தரப்பில் இருந்து 2 நாட்களுக்கு முன்பு தம்பிதுரை, செங்கோட்டையன் ஆகியோர் ஓ.பி.எஸ். வீட்டுக்கு சமாதானம் பேச சென்ற போது, அவர்களின் ஒற்றை தலைமை குறித்து பேச வீட்டுக்கு வர வேண்டாம் என்று ஓ.பி.எஸ். கோபமாக பதில் அளித்து இருந்தார். 

இதனையடுத்து எடப்பாடி அணியை சேர்ந்த எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், அன்பழகன் ஆகியோர் சென்னை மந்தைவெளியில் உள்ள ஓ.பி.எஸ்-இன் மகள் கவிதா வீட்டுக்கு நேற்று இரவு ரகசியமாக சந்தித்ததாக தகவல். இந்த சந்திப்பின் போது ஓ.பி.எஸ். தரப்பில்.இருந்து அவரது மகன் ரவிந்திரநாத் குமார் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. எடப்பாடி அணியில் இருந்து சென்ற முன்னாள் அதிமுக அமைச்சர்கள், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் மற்றும் மகளிடம் பொதுக்குழுவில் நிறைவேற்றவுள்ள இறுதி தீர்மானத்தின் நகலை வழங்கி, 95% கட்சியினர் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு தான் உள்ளது. பொதுச்செயலாளர் பொறுப்புக்கு எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், அதை ஓ.பி.எஸ்-இடம் எடுத்து கூறி, அவைத்தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளும் படி கூறுமாறு அமைச்சர் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆனால் ஓ.பி.எஸ் தரப்பில் இருந்து இந்த டீல் குறித்து எந்த முடிவும் இன்னும் எட்டப்படவில்லை என தெரிகிறது. இந்நிலையில் இன்று அவரது அணியில் இருக்கும் ஆதரவாளர்களுடன் கலந்து பேசி அடுத்த கட்ட நகர்வு குறித்து முடிவுகளை எட்டுவார் என தெரிகிறது.