×

3 எம்எல்ஏக்கள், 5 மா.செ தவிர்த்து மற்ற அனைவரும் ஈபிஎஸ் பக்கம் உள்ளனர்- திண்டுக்கல் சீனிவாசன்

 

இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி சட்டப்படி தேர்வாகி நிரந்தர பொதுச் செயலாளராவார் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுகவினரை அண்மையில் அதிமுகவின் புதிய பொருளாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

பின்னர் சிறை வாயிலில் செய்தியாளர்களை சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன், 
“கடந்த 11ஆம் தேதி பொதுக்குழு நடைபெற்ற நாளன்று அதிமுக தலைமையகத்தை கைப்பற்ற ஓபிஎஸ் அராஜகத்தை அரங்கேற்றினார். அதிமுக தலைமையகத்திற்கு பாதுகாப்பு கேட்ட நிரபராதிகள் 14 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதிமுகவின் வங்கிக் கணக்கில் பணப்பரிமாற்றம் செய்ய கூடாது என வங்கிக்கு ஓபிஎஸ் கடிதம் அளித்துள்ளார். இதில் சட்டம் அதன் வேலையை செய்யும். நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகளில் ஓபிஎஸ் தொடர்ந்து ஒவ்வொன்றாக தோல்வியை சந்தித்து வருகிறார். ஈபிஎஸ் வெற்றி பெற்று வருகிறார். இதிலும் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை உள்ளது. அதிமுகவில் தற்போது நாடகம் நடந்து வருகிறது, விரைவில் முடிந்து விடும். 

யார் யாரை நீக்கியது செல்லும், யாரிடம் கட்சி உள்ளது என்பதை பொதுகுழுவில் பார்த்தீர்கள். 3 எம்எல்ஏக்கள், 5 மாவட்ட செயலாளர்களை தவிர்த்து பெரும்பான்மையான நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் உள்ளனர். தர்மத்தின் விதிப்படி அனைத்தும் நன்றாக நடந்து தர்மம் வெல்லும். இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி சட்டப்படி தேர்வாகி நிரந்தர பொதுச் செயலாளராவார். அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக கட்சி நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கல் எரிந்தது யார், அரிவாளால் வெட்டியது யார் என வீடியோ ஆதாரங்கள் உள்ளது. யாரும் யாரையும் ஏமாற்றி விட முடியாது” எனக் கூறினார்.