×

நான் ஓபிஎஸ்- ஈபிஎஸ்-ஐ சேர்த்து வைக்கிறேன்: இயக்குநர் பாக்கியராஜ்

 

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் விழுப்புரம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு முன்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை நடிகரும் இயக்குநருமான பாக்கியராஜ் சந்தித்தார். இருவரும் தனியறையில் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. 
 

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பாக்கியராஜ்,  “எம்ஜிஆர், ஜெயலலிதா மக்களுக்காக பாடுபட்டனர். அதன் பிறகு பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி என தொடர்ச்சியாக கட்சியின் பெயர் மக்களிடம் நல்லபடியாக சென்று கொண்டிருந்தது. திருஷ்டி பரிகாரமாக ஒரு சோதனை வந்துள்ளது. மீண்டும் பழைய பலத்துடன் கட்சி இருக்க வேண்டும் என நினைத்து ஓ. பன்னீர்செல்வம் அனைவரையும் ஒருங்கிணைத்து செல்ல வேண்டும் என கூறி வருகிறார். நானும் அதையே தான் கூறி வருகிறேன். மீண்டும் அனைவரும் ஒன்றுபட்டு பழையபடி அதே பலத்துடன், தொண்டர்களுக்கு புத்துணர்வு கிடைக்கும் வகையில் பலம் பெறும். அதற்கு என்னை இணைத்துக் கொண்டு என்ன செய்ய வேண்டுமோ எப்படி செயல்பட வேண்டும் அப்படி செயல்பட தயாராக இருக்கிறேன். 

எம்ஜிஆர் கட்சியை காப்பாற்றும் வகையில், சின்ன ஒரு தொண்டனாக இவர்கள் உடன் இருந்து கட்சி பணிகளை ஆற்ற தயாராக இருக்கிறேன். அனைவரும் ஒன்று சேர்வார்கள், கொஞ்சம் நேரம் எடுக்கும். அதிமுகவில் முன்பு இருந்தே இருந்தவன் தான். இனி முறையாக இணைந்து செயல்படுவேன். கட்சி நன்றாக இருக்க வேண்டும். இதை எடப்பாடி பழனிசாமி தராப்பிடம் முடிந்தால் நானும் நேரடியாக சென்று தெரிவிப்பேன். அனைவரும் இணைவதற்கு என்னால் ஆன முயற்சிகளை செய்வேன்” என தெரிவித்தார்.