×

"இது நியாயமில்லை; தமிழருக்கே முன்னுரிமை" - முதல்வர் மீது சீறிய அன்புமணி!

 

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான பாடநூல்கள், வினா வங்கி, இதர கையேடுகள் என ஆண்டுதோறும் சுமார் 8 கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் பள்ளிக்கல்வித் துறையின் மூலம் விநியோகம் செய்யப்படுகின்றன. வழக்கமாக புத்தக அச்சிடுதல் பணிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த அச்சகங்களுக்கு வழங்கப்படும். ஆனால், இந்தாண்டு 50 சதவீதத்துக்கும் மேலான புத்தக அச்சிடுதல் பணி ஆந்திரா உட்பட வெளிமாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அச்சிடுவோர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதன் காரணமாக அரசுக்கு ரூ.6 கோடி முதல் 7 கோடி வரை இழப்பு ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ளது பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், "தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்திற்கான பாடநூல்களில் 50% அச்சிடும் ஒப்பந்தம் வெளிமாநில அச்சகங்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும், முதல் ஆர்டர் ஆந்திர அச்சகத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அச்சிடுவோர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இது உண்மையாக இருந்தால் அரசின் செயல் தவறானது. தமிழ்நாட்டில் உள்ள அச்சகங்கள் போதிய பணி இல்லாததால் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு கூட வழியில்லாமல் வாடிக் கொண்டிருக்கின்றன. 


அவற்றை வாழ வைக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அதை செய்யாமல் அண்டை மாநிலங்களின் அச்சகங்களுக்கு பணி வழங்குவது நியாயமல்ல. ஆந்திரம், தெலுங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகிய அனைத்து மாநிலங்களுக்கும் தங்களுக்குத் தேவையான பாடநூல்களை சொந்த மாநிலத்தில் தான் அச்சடிக்கின்றன; பிற மாநிலங்களுக்கு வழங்குவதில்லை. அதேபோல் தமிழக அரசும் தமிழக அச்சகங்களின் நலனை மட்டும் காக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.