×

"வேதனையா இருக்கு... நீங்களே இப்டி செய்யலாமா?" - அரசை கடிந்துகொண்ட அன்புமணி!

 

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து, அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்ட 10 கலை கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அதைக் கண்டித்து திருவரங்கம் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது. இக்கல்லூரியில் பணியாற்றுபவர்கள் கடந்த 6ஆம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

4ஆம் நாளாக போராட்டம் தொடர்கிறது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசோ, பல்கலைக்கழகமோ முன்வரவில்லை. மாறாக, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் போன்ற மிரட்டல்கள் வருகின்றன. அவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. ரூ.15,000 வரை மட்டுமே மாத ஊதியம். அதுவும் கடந்த 4 மாதங்களாக வழங்கப்படவில்லை. இச்சூழலில் அவர்களுக்குப் போராடுவதைத் தவிர்த்து வேறு என்ன வாய்ப்பு உள்ளது? அவர்கள் அனைவரும் கடந்த 15 ஆண்டுகளாக அதே கல்லூரியில் பணியாற்றி எதிர்காலத்தை தொலைத்தவர்கள். அவர்களால் இனி வேறு வேலைக்குச் செல்ல இயலாது. 

அவர்களை போராட விட்டு வேடிக்கை பார்ப்பது நியாயமல்ல. தமிழ்நாடு முழுவதும் 41 கல்லூரிகளில் பணியாற்றும் 1500-க்கும் கூடுதலான கவுரவ விரிவுரையாளர்கள் இதே நிலைதான். பேராசிரியர்கள் என்ற பணி பெருமையைச் சுமந்து கொண்டு வறுமையுடன் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். கவுரவ விரிவுரையாளர்களின் இந்தத் துயரத்திற்குக் காரணம் அரசுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் இடையில் நடக்கும் போட்டிதான். கவுரவ விரிவுரையாளர்களுக்கு அரசுதான் ஊதியம் தர வேண்டும். ஆனால் பல்கலைக்கழகங்களே தொடர்ந்து ஊதியம் அளிக்க வேண்டும் என அரசு ஆணையிட்டது.

இதுதான் இப்போது எழுந்துள்ள சிக்கல்களுக்குக் காரணம். கவுரவ விரிவுரையாளர்கள் ஊதியமாக மட்டும் ஆண்டுக்கு ரூ.72 கோடி செலவாகும். இதில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு மட்டும் ரூ.18 கோடி செலவாகும். ஆனால், எந்தப் பல்கலைக்கழகத்திலும் அவ்வளவு நிதி இல்லாததால் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. அவர்கள் போராட்டம் நடத்தினால் ஒரு சில மாதங்களுக்கு மட்டும் ஊதியம் வழங்கப்படுவதும், பின்னர் பாக்கி வைக்கப்படுவதும் வாடிக்கையாகி விட்டது. பல்கலைக்கழகங்கள் அதன் நிரந்தரப் பணியாளர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கவே நிதியில்லாமல் திணறுகின்றன.


 
பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிகளுக்கு நிதி இல்லை. இத்தகைய சூழலில் அரசு கல்லூரிகளாக்கப்பட்ட உறுப்புக் கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்களுக்கும் ஊதியம் வழங்க கட்டாயப்படுத்தப்பட்டால் பல்கலைக்கழகங்கள் முடங்கி விடும். அதேநேரத்தில் இந்த ஊதியச் சுமையை அரசால் தாங்கிக் கொள்ள முடியும். இதை உணர்ந்து கவுரவ விரிவுரையாளர்களின் ஊதிய செலவை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். உள்ளிருப்புப் போராட்டம் நடத்தும் திருவரங்கம் கல்லூரி உள்ளிட்ட 41 அரசு கல்லூரி பணியாளர்களின் ஊதியம் மற்றும் ஊதிய உயர்வு நிலுவையை உடனே வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.