×

நாடாளுமன்றத்தில் அரசர்களின் ஆட்சி கிடையாது.. ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்?.. ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி ஆவேசம்
 

 

நாடாளுமன்றத்தில் அரசர்களின் ஆட்சி கிடையாது, ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அரசை காங்கிரஸ் ரஞ்சன் சவுத்ரி விமர்சனம் செய்துள்ளார்.

மாநிலங்களவை எம்.பி.க்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களவையில் அவை நடவடிக்கைகள் தொடங்கியவுடன் காங்கிரஸ், தி.மு.க. மற்றும் தேசிய மாநாட்டு கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அதன பிறகு காங்கிரஸ் எம்.பி. ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: கடந்த அமர்வின் நடவடிக்கைகளின் தவறுகளுக்கு தற்போதைய அமர்வில் தண்டனை வழங்கப்படுவதை பார்த்தோமா? இங்கே ஒரு பின்னோக்கி விளைவு நடக்கிறது. 

எங்களுக்குள் அச்சத்தை ஏற்படுத்துவதும், அச்சுறுத்தல்களை பயன்படுத்தி எங்களது தரப்பு முன்வைப்பதற்கான வாய்ப்புகளை பறிப்பதும் தற்போதைய அரசாங்கத்தின் புதிய உத்தியாகும். நாடாளுமன்றத்தில் இந்த பின்னோக்கி விளைவை இதற்கு முன் நாங்கள் பார்த்தது இல்லை. நாடாளுமன்றத்தில் ராஜாக்களின் ஆட்சி இல்லை. இது ஜனநாயகம். நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் மகா பஞ்சாயத்து. மன்னிப்பு கேட்பதற்கு காலில் விழுவதற்கு அவர்கள் அரசர்களின் ஜமீன்தார்கள் அல்ல. 

இது பெரும்பான்மையினரின் பாகுபலி யுக்தி மற்றும் இது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 மாநிலங்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஆதரவாக மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம். தற்போதைய குளிர்கால அமர்வில் இருந்து அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடவடிக்கை பின்னோக்கி விளைவு என்பதை குறிக்கிறது. ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.