எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த ரோஹன் அசோக் கவுண்டே..இன்று பா.ஜ.க.வில் இணைகிறார்..
கோவாவில் சுயேட்சை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரோஹன் கவுண்டே தனது எம்.எல்.ஏ. பதவியை கடந்த சில தினங்களுக்கு ராஜினாமா செய்தார், இன்று அவர் பா.ஜ.க.வில் இணைக்கிறார்.
கோவா மாநிலத்தில் வடக்கு கோவா மாவட்டத்தில் உள்ள போர்வாரிம் சட்டப்பேரவை தொகுதியிலிருந்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரோஹன் அசோக் கவுண்டே. இவர் மறைந்த முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன் ரோஹன் அசோக் கவுண்டே தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் நேற்று ரோஹன் அசோக் கவுண்டே ஆளும் பா.ஜ.க.வில் சேரப்போவதாக தெரிவித்தார். ரோஹன் அசோக் கவுண்டே இது தொடர்பாக கூறுகையில், போர்வோரிமின் வளர்ச்சியை தொடர்ச்சியை உறுதிப்படுத்தவும், உள்ளடக்கிய மற்றும் ஒற்றுமை கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்கும் நான் பா.ஜ.க.வில் சேர முடிவு செய்துள்ளேன். வெள்ளிக்கிழமை (இன்று) காலை 10 மணிக்கு பானாஜியில் உள்ள மகாலட்சுமி கோயிலில் பா.ஜ.க.வில் சேருவேன் என்று தெரிவித்தார்.
கோவாவில் தற்போது முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. கோவா சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களை உள்ள நிலையில், சுயேட்சை எம்.எல்.ஏ.வான ரோஹன் அசோக் கவுண்டே தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க.வில் சேர உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.