×

‘தலித் இளைஞர்கள் கொலை’ விசிகவினர் மீது வழக்குப்பதிவு!

மதுரையில் அரக்கோணம் இரட்டைக் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக போலீசார் விசிகவினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அரக்கோணத்தை அடுத்த சோமனூர் காலனியில் தேர்தல் முன்விரோதம் காரணமாக அர்ஜுனன், சூர்யா என்கின்ற இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர். 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொலைக்கு காரணமான அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி என்பவரின் மகன் சத்யா உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த சூர்யாவுக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆகும்
 

மதுரையில் அரக்கோணம் இரட்டைக் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக போலீசார் விசிகவினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அரக்கோணத்தை அடுத்த சோமனூர் காலனியில் தேர்தல் முன்விரோதம் காரணமாக அர்ஜுனன், சூர்யா என்கின்ற இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர். 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொலைக்கு காரணமான அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி என்பவரின் மகன் சத்யா உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த சூர்யாவுக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆகும் நிலையில் , அர்ஜுனனுக்கு திருமணமாகி 8 மாத கைக்குழந்தையுடன், அவரது மனைவி 4 மாத கர்ப்பமாக உள்ளார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் .

இந்த சூழலில் அரக்கோணம் இரட்டைக்கொலை சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். படுகொலைக்கு காரணமானவர்கள் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும், உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் செய்தனர்.

இந்நிலையில் மதுரையில் இரட்டைக்கொலைக்கு எதிராக போராட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கதிரவன் உள்ளிட்ட 79 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொரோனா காலத்தில் பொது இடத்தில் கூடுதல், நோய் பரப்புதல் உள்ளிட்ட காரணங்களுக்காக தல்லாகுளம் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.