×

நாங்கதான் கட்சியை நடத்துவோம்; நாங்க எதுக்காக தேர்தல் ஆணையத்துக்கு போகணும்? கோவை செல்வராஜ் 

 

 ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூடுகிறது.   அந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் ஆகிறார் என்று சிவி சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் சொல்லி வரும் நிலையில்,  ஒருங்கிணைப்பாளரின் கையெழுத்து இல்லாமல் செல்லாதே என்கிற பேச்சுக்கு,  ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே காலி ஆகிவிட்டது.   அவர் வெறும் பொருளாளர் மட்டும்தான் என்று சொல்லி வருகிறார் சிவி சண்முகம் .

இது குறித்து பேசியுள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர், அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ்,   ’’சென்னை ஓபிஎஸ் இல்லத்தில் அவரைச் சந்தித்துவிட்டு வெளியே வந்தபோது செய்தியாளரிடம் பேசிய கோவை செல்வராஜ்.   ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலியாகிவிட்டது என்கிறார்கள்.   43-வது விதியின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது.  அதன்படி இரண்டு பேருமே முழு அதிகாரம் பெற்றவர்கள் .  பதவி காலியாகிவிட்டது சண்முகம் செல்வது கேலிக்கூத்து’’என்றார். 

அவர் மேலும்,   ‘’எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு 11ஆம் தேதி பொதுக்குழு என்பது கனவாகத்தான் இருக்கும் உண்மையாகாது’’ என்றார்.  மேலும்.   ’’கட்சியை பலப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.  கட்சியை நாங்கள் தான்  வழி நடத்துவோம். என்றும் அவர் தெரிவித்தார்.

 தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கம் தான் உள்ளார்கள்.   ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சென்னைக்கு வருவதாக சொல்லி இருக்கிறார்கள்.  ஓபிஎஸ்தான்  அமைதியாக இருக்கச் சொல்லியிருக்கிறார்.   ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் இருவரையும் ஒன்றாகத்தான் அமர வைக்க வேண்டும் . நாகரீகம் இல்லாமல் நடந்து கொண்டார்கள்.  அரசியல் நாகரிகம் இல்லாமல் அவர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள்.  ஆட்சியைக் காப்பாற்ற சொல்லி ஓபிஎஸ் காலில் விழுந்தது யார் என்று தெரியும்’’என்று சொன்னவர்,

’’பொதுக்குழு விவகாரம் குறித்து  எந்தவித புகாரும் தேர்தல் ஆணையத்திடம் தரவில்லை.  கட்சியை நாங்கள் தான் நடத்துவோம் என்று முடிவு எடுத்த பிறகு நாங்கள் எதற்கு தேர்தல் ஆணையத்தை நாட வேண்டும்’’ என்று கேட்டார்.