×

தெலங்கானா முதல்வர் மாதத்தில் 15 நாட்கள் பண்ணை வீட்டில் பொழுதை கழிக்கிறார்.. சந்திரசேகர் ராவை தாக்கிய பா.ஜ.க. அமைச்சர்

 

தெலங்கானா முதல்வர் ஒவ்வொரு மாதமும் 15 நாட்கள் பண்ணை வீட்டில் பொழுதை கழிக்கிறார், சாமானிய மக்களுடன் தொடர்பு கொள்வதில்லை என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி குற்றம் சாட்டினார்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மத்திய பா.ஜ.க. அரசை கடுமையாக தாக்கி வருகிறார். முதல்வர் சந்திரசேகர் ராவ் நேற்று முன்தினம் தனது சுதந்திர தின உரையிலும் பா.ஜ.க.வை தாக்கினார். டெல்லியில் உ்ளள தற்போதைய மத்திய அரசு கூட்டாட்சி மதிப்பை சீர்குலைத்து வருகிறது. ஒருவர் அமர்ந்திருக்கும் கிளையை வெட்டுவது போல், மாநிலங்களை பொருளாதார ரீதியாக நலிவடைய செய்யும் சதிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது என்று கே.சந்திரசேகர் ராவ் குற்றம் சாட்டினார். 

இந்நிலையில், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். செகந்திராபாத் பா.ஜ.க. எம்.பி.யும், மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சருமான ஜி.கிஷன் ரெட்டி கூறியதாவது:  தெலங்கானாவில் எட்டு ஆண்டுகளாக ஊழல் மற்றும் சர்வாதிகார ஆட்சியை தெலங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) நடத்தி வருகிறது. 

தெலங்கானா முதல்வர் ஒவ்வொரு மாதமும் 15 நாட்கள் பண்ணை வீட்டில் பொழுதை கழிக்கிறார்,  சாமானிய மக்களுடன் தொடர்பு கொள்வதில்லை. இப்படிப்பட்ட முதல்வரை மக்கள் விரும்பவில்லை, அட் ஹோம் பங்ஷனிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. அப்படிப்பட்ட முதல்வர் தெலங்கானாவில் இருக்க மாட்டார். இங்கு தாமரை மலரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.