×

பா.ஜ.க. எனக்கு உறுதியளித்ததை மறுத்ததால் மூன்று கட்சி கூட்டணி பிறந்தது... உத்தவ் தாக்கரே தாக்கு 
 

 

பா.ஜ.க. எனக்கு உறுதியளித்ததை (இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி) மறுத்ததால் மூன்று கட்சி கூட்டணி (சிவ சேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ்) பிறந்தது என்று பா.ஜ.கவை உத்தவ் தாக்கரே தாக்கினார்.

மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும், சிவ சேனா தலைவருமான உத்தவ் தாக்கரே, சாம்னா பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் சஞ்சய் ரவுத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசாங்கத்தின் பரிசோதனையை மக்கள் வரவேற்றுள்ளனர். பா.ஜ.க. எனக்கு உறுதியளித்ததை (இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி) மறுத்ததால் மூன்று கட்சி கூட்டணி (சிவ சேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ்) பிறந்தது. சிவ சேனா மீண்டும் முதல்வராக பதவியேற்பார்.

கட்சியின் தளத்தையும், உறுப்பினர்கள் எண்ணிக்கையையும் விரிவுப்படுத்தும் பணியில் ஈடுபடுவேன். ஆகஸ்ட் மாதம் முதல் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். அதிகபட்ச உறுப்பினர் சேர்க்கையை பெற விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் தேர்தலில், பா.ஜ.க.-சிவ சேனா கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து அந்த கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், சிவ சேனா ஆட்சியில் பங்கு கோரியதால் கூட்டணி உடைந்தது.

இதனையடுத்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சிவ சேனா கூட்டணி அமைத்து மகாராஷ்டிராவில் ஆட்சியை அமைத்தது. இந்நிலையில், சிவ சேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், அம்மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டார். மேலும், ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு சிவ சேனா எம்.எல்.ஏ.க்கள், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசாங்கத்துக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றனர். இதனையடுத்து உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில்  பா.ஜ.க.-சிவ சேனா (கிளர்ச்சி) கூட்டணி ஆட்சி அமைத்தது.