×

நாளை நமதே! சொன்னபடியே தீர்ப்பு! வழக்கறிஞர் குழுவுடன் ஓபிஎஸ் மகிழ்ச்சி

 

நாளை நல்ல தீர்ப்பு வரும் என்று நேற்று இரவு தனது ஆதரவாளர்களிடம் பேசி நம்பிக்கை கொடுத்திருந்தார் ஓபிஎஸ்.  அதன்படியே இன்று ஓபிஎஸ்க்கு நல்ல தீர்ப்பு வந்திருக்கிறது.

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.  பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக நேற்று மாலையில் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார் ஓபிஎஸ்.   புகழேந்தி, கோவை செல்வராஜ் ,கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, நாஞ்சில் கோலப்பன் உட்பட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் வந்திருந்தனர்.

 அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளும் ஓட்டலுக்கு திரண்டு வந்துள்ளனர்.   500 பேர் வரை கூடி விட்டதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.  ஒவ்வொரு மாவட்டத்தினராக அழைத்து அவர்களுடன் பேசி விட்டு பின்னர் போட்டோ எடுத்துக் கொண்டு அனுப்பினார் ஓபிஎஸ்.    எடப்பாடி ஆதரவாளர்களாக இருந்தவர்கள் பலரும் மனம் மாறி தற்போது ஓபிஎஸ்சை சந்திக்க வந்திருந்தார்கள்.

 ஓபிஎஸ்சை சந்தித்த நிர்வாகிகளிடம்,   நாளை தீர்ப்பு நமக்கு நல்லபடியா வரும்.. கவலைப்படாதீங்க என்று சிரித்துக் கொண்டே நம்பிக்கையுடன் சொன்னார்.  இரவு 9:45 மணிக்கு மேல் சந்திப்பை முடித்துவிட்டு ஓட்டலில் இருந்து வெளியே சென்றார் ஓபிஎஸ்.  அப்போதும்  சிரித்த முகத்துடன் நாளை நல்ல தீர்ப்பு வரும் என்று செய்தியாளர்களிடம் சொல்லிச் சென்றார்.

ஆளுநர் விருந்தை புறக்கணித்து பாஜக எதிர்ப்பை தொடங்கியிருக்கிறார் எடப்பாடி.  இந்த நிலையில் ஓபிஎஸ்சின் நம்பிக்கை அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

தீர்ப்பை ஓபிஎஸ்-இபிஎஸ் இருவருமே முன்கூட்டியே கணித்துள்ளனர்.  அதனால்தான் இபிஎஸ் பாஜகவுக்கு எதிர்ப்பு காட்ட தொடங்கிவிட்டார். ஓபிஎஸ் நம்பிக்கையும் இருந்தார் என்கிறது அதிமுக வட்டாரம்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழு செயற்குழு நடத்த வேண்டும்.  தனித்தனியாக கூட்டம் நடத்தக்கூடாது.  பொதுக்குழு வினை கூட்ட சட்ட ஆணையரை நியமிக்க வேண்டும்.  ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே பொது குழுவினை கூட்ட வேண்டும்.  இந்த ஆண்டு இனி பொதுக்குழுவினை நடத்தக்கூடாது.  ஜூலை 11ஆம் தேதி நடத்திய பொதுக்குழு செல்லாது. எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்ததும் அவரை தேர்வு செய்ததும் செல்லாது.  ஜூன் 23ஆம் தேதி முன் இருந்த நிலையே அதிமுகவில் தற்போது தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  இதை அடுத்து தனது வழக்கறிஞர்கள் குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் ஓபிஎஸ்.