×

இந்தியாவில் எந்த கட்சியிலும் இரட்டை தலைமை இல்லை; அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவை- திருநாவுக்கரசர்

 

அக்னிபாத் திட்டத்தை கண்டித்து திருச்சி மாநகர மாவட்டம் சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது. இதில் மத்தியில் ஆளும் மோடி அரசை கண்டித்து கோசங்களை எழுப்பினர். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், “இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சம் பேரை ராணுவத்தில் சேர்த்து இருக்க வேண்டும். அக்னிபாத் திட்டம் மூலம் இந்திய ராணுவத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றனர். மேலும் இளைஞர்களின் எதிர்காலத்தை இத்திட்டம் மூலம் நாசபடுத்துகின்றனர். 

அதிமுக எதிர்காலம் குறித்து கேட்டதற்கு நான் ஜோசியக்காரன் கிடையாது. எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் அக்கட்சியில் இருந்தவன் என்ற முறையிலும், பொதுவான அரசியல்வாதி என்ற முறையில் கூறுகிறேன். இந்தியாவில் தேசிய கட்சியும் மாநில கட்சியோ இரட்டை தலைமையில் செயல்படவில்லை. இரட்டை குதிரையில் சவாரி செய்ய முடியாது, இரண்டு கப்பலில் பயணம் செய்ய முடியாது. எனவே ஒற்றை தலைமை வேண்டும். அது இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா என யாராக இருந்தாலும் தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களில் தலைமையில் அதிமுக செயல்பட வேண்டும். பலமான எதிர்க்கட்சி தேவை. எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என்ற இரண்டும் நாணயத்தின் இரு பக்கங்கள். நாளை ராகுல்காந்தி தலைமையில் எங்கள் ஆட்சி அமையும்போது பிஜேபி  எதிர்கட்சியாக இருக்க வேண்டும். எனவே அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை” என்றார்.