×

ஈபிஎஸ், ஓபிஎஸ் பிரச்சனை- டெல்லியில் பேச்சுவார்த்தை நடக்கிறது: டிடிவி தினகரன்

 

அதிமுக தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி  இன்று குண்டர்கள் மற்றும் டென்டர் பார்ட்டிகள் கையில் சிக்கியுள்ளதாகவும் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செங்கல்பட்டு மத்திய மாவட்டம் சார்பில் எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்றார். அப்போது மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா புகைபடத்திற்கு டிடிவி தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன் தொடர்ச்சியாக டிடிவி தினகரனுக்கு கட்சி நிர்வாகிகள் வேலை அன்பளிப்பாக வழங்கினர். 

பொதுக்ககூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், “ஏழை, எளிய மக்களுக்காக வாழ்ந்தவர், ஏழை, எளிய மக்களுக்காக பல திட்டங்களை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். இன்று புரட்சி தலைவரை பற்றி தெரியாதவர்கள் மேடையில் பேசி வருகின்றனர். தமிழகத்தில் மூன்று முறை தொடர்ந்து ஆட்சி செய்தவர் எம்.ஜிஆர். தமிழகத்தில் எடபாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் சண்டை டெல்லியில் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றது.
 
எடப்பாடி பழனிசாமியை விட துரோகி இந்த உலகத்தில் வேறு யாரும் இருக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி மீது எத்தனை குற்றச்சாட்டு உள்ளது என்பது அனைவருக்கு தெரியும். ஒரு பொதுக்குழு கூட்டம் நடத்த பல கோடி ரூபாய் செலவு செய்தவர் எடப்பாடி. இருவரும் சுயநலத்தால் பதவி வெறியால் பணம் இருக்கும் திமிறால் சுற்றி திரிகின்றனர். அதிமுக தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி  இன்று குண்டர்கள் கையில், டென்டர் பார்ட்டிகள் கையில் சிக்கியுள்ளது.


ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. எடப்பாடி பழனிசாமியும் ஓபன்னீர் செல்வமும் என்ன செய்ய போகின்றார்கள் என பார்க்கலாம். பொதுக்குழுவை கூட்டி பன்னீர் செல்வத்தை விரட்டி அடித்து இடைக்கால பொதுச்செயலாளராக அறிவித்து இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது. 
இடைத்தேர்தலில் அமுமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படும்” என்றார்.