×

அதிமுக செயல்படாமல் இருக்க ஈபிஎஸ், ஓபிஎஸ் தான் காரணம்- டிடிவி தினகரன்

 

திமுக என்றாலே ஊழல் கட்சி என்பது போல செயல்பட்டுவருகிறது, திமுகவிற்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


திண்டுக்கல் மேற்கு மாவட்ட அமமுக தகவல்தொழில்நுட்ப மகளிரணி செயலாளர் இ.ரஞ்சிதத்தின் இல்ல திருமண விழா வரவேற்பு நிகழ்ச்சி மதுரை நாகமலை, புதுக்கோட்டை பகுதியில் உள்ள மாஸ்டர் மஹாலில் நடைபெற்றது. இதில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் கலந்துகொண்டு மணமக்கள் கோடீஸ்வரன் - ரஷ்மியை வாழ்த்து தெரிவித்தார்.

இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய டிடிவி தினகரன்,“மணமக்கள் நீடுழி வாழ வேண்டும், இந்த திருமணம் கலப்பு திருமணமாக நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது, கழக நிர்வாகி ரஞ்சீதம் கட்சிக்கு விசுவாசமாக பணியாற்றிவருகிறார். இவரது இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்திகளில் வருகிறது, போடாத சாலைகளுக்கு கூட பணம் பெறுகின்றனர். 

திமுக என்றாலே ஊழல் என்பதை தான் இது காட்டுகிறது. அனைத்து மதத்தினருக்கும் நடுநிலையாக இருப்பது தான் ஒரு கட்சியின், ஆனால் மதசார்பற்ற கட்சி என கூறிக்கொண்டு இந்து மதத்திற்கு எதிராக பேசிவருகிறது. திமுக அரசு தேர்தலின் போது அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை திமுகவிற்கு கூட்டணி பலம் இருந்தாலும் மக்கள்  நாடாளுமன்ற தேர்தலில் பாடம் புகட்டி தோல்வியை தருவார்கள். 2023ல் அமமுகவின் தேர்தல் வியூகம் வெளிப்படும், ஜெயலலிதா மறைவிற்கு பின் ஓபிஎஸ் ஈபிஎஸ்யிடம் அதிகாரம், பணத்தை நம்பி மட்டும் தான் அவர்களுடன் சிலர் இருந்தனர். அதிமுக நீதிமன்றத்தின் மூலம் செயல்படாமல் இருப்பதற்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் தான் காரணம். ஓபிஎஸ், ஈபிஎஸ் பிரச்சனையால் தமிழகத்தில் அமமுக எதற்காக தொடங்கப்பட்டது என்பதை புரியவைத்துள்ளது, ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழக அரசு சரியான முறையை கையாண்டு தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும்” என்றார்.