×

ஹிஜாப் அணிந்த பெண் எப்போது ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவராவார் என்று சொல்லுங்கள்?.. ஓவைசிக்கு  பா.ஜ.க. கேள்வி

 

ஹிஜாப் அணிந்த பெண் எப்போது ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவராவார் என்று சொல்லுங்கள்? என்று ஓவைசிக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது.

கர்நாடக மாநிலம் பிஜப்பூரில் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலுக்காக அங்கு ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி பிரச்சாரம் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் அசாதுதீன் ஓவைசி பேசுகையில், ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக பதவியேற்றதை குறிப்பிட்டு, ஹிஜாப் அணிந்த பெண் ஒரு நாள் நம் நாட்டின் பிரதமராக வருவார் என நம்புகிறேன். மதச்சார்பின்மையை ஒழிக்க பா.ஜ.க. விரும்புகிறது, நாட்டில் அனைவருக்கும் சம வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.

அசாதுதீன் ஓவைசியின் கருத்துக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது. ஹிஜாப் அணிந்த பெண் எப்போது ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவராவார் என்பதை சொல்லுங்கள் என்று பா.ஜ.க. கேள்வி கேட்டுள்ளது. பா.ஜ.க.வின் ஷெஹ்சாத் பூனவல்லா டிவிட்டரில், ஹிஜாப் அணிந்த பெண் ஒரு நாள் நம் நாட்டின் பிரதமராக வருவார் என நம்புகிறேன் என்று அசாதுதீன் ஓவைசி பேசிய வீடியோவை ஷேர் செய்து இருந்தார்.  

மேலும், அந்த டிவிட்டில், ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமராக வருவார் என்று ஓவைசி ஜி நம்புகிறார். அரசியலமைப்பு சட்டம் யாரையும் தடை செய்யவில்லை, ஆனால் ஹிஜாப் அணிந்த பெண் எப்போது ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவராவார் என்று சொல்லுங்கள்? அதிலிருந்து தொடங்கலாமா? என்று பதிவு செய்து இருந்தார்.