×

அதிமுகவை தவிர எந்த கட்சியும் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட முடியாது- செங்கோட்டையன்

 

அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில், வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சரும் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்றது. அப்போது பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகராட்சி,பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு உண்டான நிர்வாகிகளிடம்  வாக்காளர் சேர்க்கும் பட்டியலை அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.பண்ணாரி, மற்றும் அதிமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டத்தைக் கூட்டினால் எந்த கட்சியும் போட்டி போட முடியாது. தமிழ்நாட்டில் அதிமுகவை தவிர எந்த கட்சியும் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட முடியாது. மேலும் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளியில் பயிலும் மாணவ,மாணவியர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மாணவர்களும் மருத்துவர் ஆகலாம் என்ற சாதனையை படைத்தவர் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமி.

விட்டு செல்கின்றவர்களை பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. சில வெட்டுக்கிளிகள், வேடந்தாங்கல் பறவைகள் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தமிழ் மண்ணில் யாராலும் வீழ்த்த முடியாது” எனக் கூறினார்.