×

 சசிகலா அதிமுகவில் இணைப்பா? ஓபிஎஸ் பரபரப்பு 

 

ஓபிஎஸ்ஐ ஓரங்கட்டி விட்டு எடப்பாடி பழனிச்சாமி நடத்திய அதிமுக பொதுக் குழு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற பரபரப்பு தீர்ப்பு வெளியிட்டு இருக்கிறது. இதை அடுத்து ஓபிஎஸ் மெரினாவிற்கு சென்று எம்ஜிஆர் நினைவிடம், ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி செலுத்தினார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது,    சில மாதங்களுக்கு முன்னதாக ஏற்பட்ட அசாதாரணமான சூழலில் நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது. தொண்டர்களின் இயக்கத்தை யார் பிளவு படுத்த நினைத்தாலும் அது  நடக்காது.  சர்வாதிகாரமும் அதிமுகவில் நடக்காது.  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிமுகவிற்கு கிடைத்த முழுமையான வெற்றி என்றார்.

 அவர் மேலும்,   அனைவரும் ஒன்றுபட வேண்டும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சேர்க்கப்பட வேண்டும் . அதிமுகவின் கொள்கைகளுக்கு இசைந்து வருபவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றார்.

 அதிமுகவில் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என்று இரு அணி உள்ளது குறித்து,   அவர்கள் தரப்பு- எங்கள் தரப்பு என்ற பாகுபாடு இல்லை.  அனைவரையும்  அரவணைத்து செல்வதுதான் தலைமை பண்பு.  எம் ஜி ஆர்,  ஜெயலலிதா செய்த தியாகங்களை மனதில் வைத்து செயல்படுவோம் . எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும் தொண்டர்களின் விருப்பப்படியே இருக்கும் .  தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் பக்குவம் இருக்க வேண்டும் . உயர்நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் மதித்து நடப்போம் என்று தெரிவித்திருக்கிறார்.

 அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று ஓபிஎஸ் சொல்லி இருப்பதால் சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைப்பா? என்ற சலசலப்பு எழுந்திருக்கிறது அக்கட்சி வட்டாரத்தில்.