×

சசிகலா அதிமுக அலுவலகம் செல்கிறார் - நரசிம்மன் பரபரப்பு

 

சென்னை தி. நகர் இல்லத்தில் தனது ஆதரவாளர்களை இன்று சந்தித்து பேசி உள்ளார் சசிகலா.  

தமிழகம் முழுவதும்  சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்தித்து வந்த சசிகலா,  ஆன்மீக பயணமும் மேற்கொண்டு வந்தார்.  இந்நிலையில் இன்று  தனது ஆதரவாளர்களை தனது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசி உள்ளார்.

முன்னாள் எம்எல்ஏ நரசிம்மன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் சசிகலாவை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  பின்னர் செய்தியாளர்களிடம்   பேசிய நரசிம்மன்,   அதிமுகவில் சுய லாபத்திற்காக சிலர் செயல்பட்டு வருகிறார்கள்.   சில காலம் மட்டுமே இது நீடிக்கும்.   நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகள் முடிந்த பின்னர் உரிய நேரத்தில் உரிய நேரத்தில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவார் சசிகலா என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக தலைமை அலுவலகத்தை எடப்பாடி பழனிச்சாமி பூட்டி வைத்ததால், பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார் ஓபிஎஸ்.  இதனால் எழுந்த கலவரத்தை அடுத்து வருவாய்த்துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.   பின்னர் நீதிமன்றத்தில் போராடி அதிமுக தலைமை அலுவலகத்தில்
சாவியைப் பெற்றார் எடப்பாடி பழனிச்சாமி.  அந்த சாவியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். 

 ஓபிஎஸ் தொடர்ந்துள்ள அந்த வழக்கில் தங்களின் பதிலை கேட்காமல் எந்த முடிவையும் அறிவிக்க கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி கேவியட் மனு தாக்கல் செய்திருக்கிறார்.   இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சசிகலா வருவார் என்று அவரது ஆதரவாளர் தெரிவித்து இருப்பது அதிமுகவில் மேலும் சலசலப்பை கூட்டி இருக்கிறது.