×

ஒரு செங்கல்லை வைத்து கோட்டையை தகர்த்துக் காட்டியவர் உதயநிதி ஸ்டாலின்- ஆர்.எஸ்.பாரதி

 

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில், கட்சியில் உழைத்தவர்களுக்கெல்லாம் சீட் கிடைக்கிறது இல்லை, உழைக்காதவர்களுக்கு பதவி கிடைக்கிறது. 

கட்சிக்கு உண்மையாக இருப்பவர்களை ஒதுக்கத்தான் செய்வார்கள், ஒரே கட்சி, ஒரே கொடி என இருந்த தனக்கு 63 வயதில்தான் எம்.பி. சீட் கிடைத்தது. திமுஅக்வுக்கு விசுவாசமாக இருந்தால் நிச்சயம் பதவி தேடிவரும், எங்களுக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் எம்.எல்.ஏ., எம்.பி ஆகி விட்டனர் என பேசியிருந்தார். இது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நாளை எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கவுள்ள நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை, தி.நகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கலைத்துறையில் வாரிசுகள் வருவது போல், அரசியலில் வாரிசுகள் வருவதில் என்ன தவறு? தமிழ்நாட்டில் ஒரு செங்கல்லை வைத்து கோட்டையை தகர்த்துக் காட்டியவர் உதயநிதி ஸ்டாலின்” எனக் கூறினார்.

திமுக இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பதவி ஏற்கிறார். ஆளுநர் மாளிகையில் காலை ஒன்பது முப்பது மணிக்கு இந்த பதவி ஏற்பு விழா நடைபெற இருக்கிறது.அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்துவைக்கவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.