×

2014ல் தான் சுதந்திரம் கிடைத்தது என வரலாற்றை மாற்றிகூட எழுதுவார்கள் - பாஜகவை விமர்சித்த ப.சிதம்பரம்..

 

பாஜகவினர் 2014 ஆம் ஆண்டில் தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது என வரலாற்றை மாற்றி எழுதினாலும் எழுதுவார்கள் என்று முன்னாள் மத்திய  நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்  முன்னாள் தலைவர் குமரி அனந்தன், தனது  90வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.  இதனையொட்டி அவரது பிறந்தநாள் விழா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில்  கொண்டாடப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில்  முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் தலைவர்கள் கே.வீ. தங்கபாலு, சு.திருநாவுக்கரசர் எம்.பி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு குமரி அனந்தனை வாழ்த்தினர்.

அப்போது பேசிய ப.சிதம்பரம் ,  இந்திய அரசியலில் குமரி அனந்தன் தெரிந்து கொள்ளாத விஷயம் இருக்க முடியாது என்று பாராட்டினார்.   தொடர்ந்து  குமரி அனந்தன் 1933 ஆம் ஆண்டில் பிறந்தார் என்றும், அன்று நடந்த வரலாறு பாடப்புத்தகத்தில் மறைக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.  அன்றைய காலகட்டத்தில் நடந்த வரலாற்றை மறைத்து வருகிறார்கள் என்றும், வரும் காலங்களில்   2014 ஆம் ஆண்டில் தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்றுகூட  பாஜகவினர்  எழுதினாலும் எழுவார்கள் என்று விமர்சித்தார்.

மேலும், பாடப்புத்தகத்தின் வாயிலாக தான் வரலாற்றை தெரிந்து கொள்ள முடியும் என்கிற நிலை மாறி,  வேறுவகையான  நூல்கள் மூலமாகவே  தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும் கூறினார். மேலும் குமரி அனந்தன் தனது சுயசரிதையை எடுத வேண்டும் என்றும், அதில் தமிழகத்தின் வரலாறும், காங்கிரஸ் கட்சியின் வரலாறும் இடம்பெறும் என்றும்  தெரிவித்தார்.