×

அதிமுக தலைமை கழகம் எடப்பாடியின் அப்பன் வீட்டு சொத்தா? ஓபிஎஸ் அதிரடி

 

அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் சமீப காலமாக ஓபிஎஸை சந்தித்து ஆதரவு தெரிவித்து வரும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் நேற்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் பெரியகுளம் அருகே உள்ள ஓபிஎஸ்ன் பண்ணை வீட்டில் நேற்று சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று மதுரை புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், திருமங்கலம் தொகுதி அதிமுக நிர்வாகிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பெரியகுளம் அருகே உள்ள ஓபிஎஸ்- இன் பண்ணை வீட்டிற்கு வந்து அவருக்கு மாலை அணிவித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். 

அதன்படி இன்று, மதுரை முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன், திருமங்கலம் சட்டமன்ற தொகுதி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மாணவர் அணி ஒன்றிய செயலாளர் சிவா, மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, திருப்பரங்குன்றம் வடபழஞ்சி குபேந்திரன் திருமங்கலம் நகர பொறுப்பாளர் ராஜாமணி கள்ளிக்குடி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் இருந்து முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன்  தலைமையில், அந்த மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள்  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “அதிமுக தலைமை கழகம் எடப்பாடி பழனிச்சாமியின் அப்பன் வீட்டு சொத்தா? என் வீட்டில் நான் திருடுவேனா? தலைமை கழகம் எனது வீடு, அதிமுகவில் மட்டுமே தொண்டர்கள் தலைமை பதவிக்கு வர முடியும், பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த போது 10 அமைச்சர்கள் ராஜினாமா செய்வோம் என அறிவுறுத்தினேன்,ராஜினாமா செய்துவிட்டு தொகுதியில் கட்சி வேலை பார்க்க வலியுறுத்தினேன், ஜெயலலிதா 13 ஆண்டுகளுக்கு பிறகு என்னை தான் முதல்வராக ஆக்கினார், கீழே போய் தொண்டர்களை சந்திப்போம், அவர்கள் நானா, எடப்பாடி பழனிசாமியா என முடிவு செய்யட்டும். பதவி ஆசை இல்லாத தன்னை பதவி ஆசை உள்ளவன் என கூறுகிறார்கள். அதற்கு தொண்டர்கள் முடிவு பண்ணட்டும்” எனக் கூறினார்.