×

“தமிழிசை, எல் முருகன் போல் தனக்கும் மத்திய அரசின் பதவி கிடைக்க வேண்டுமென அண்ணாமலை பேசிவருகிறார்”

 

பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை மிரட்டலுக்கு எல்லாம் நாங்கள் பயப்பட போவதில்லை. ஊழல் நடந்திருக்கிறதா என்பதை நீதிமன்றம் மட்டுமே முடிவு செய்யும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்த நாளையொட்டி, திண்டுக்கல்லை அடுத்துள்ள தோட்டனூத்தில் புதிதாக  கட்டப்பட்டு வரும் இலங்கை தமிழர் அகதிகள் முகாம் பகுதியில்  மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை தாங்கினார். விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். 

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியசாமி, “பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறுவதைப் பற்றி நாங்கள் கவலை கொள்ள போவதில்லை. எந்தத் துறையிலும் திமுக ஆட்சியில் ஊழல் நடைபெறவில்லை. அவர் அவரது முதுகினை திரும்பிப் பார்க்கட்டும் பின்னர் அடுத்தவர் பற்றி குறை கூறட்டும். ஊழல் குற்றச்சாட்டுகளை அண்ணாமலை கூறுவதற்கு எந்த தகுதியும் இல்லை. ஊழல் நடந்துள்ளது என்றால் விசாரணையில் அதனை நீதிமன்றம் மட்டுமே முடிவு செய்யும். 

தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர்கள் திமுகவினை அதிகளவில் விமர்சனம் செய்தால் அவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும். இதற்கு தற்போது மத்திய இணை அமைச்சர் பதவியில் உள்ள எல் முருகன் மற்றும் தெலுங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் சாட்சி. மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மத்திய அரசில் ஏதேனும் பதவி வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து திமுக வினை விமர்சித்து வருகிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி இருந்த காரணத்தினால் 4 தொகுதிகளை பெற்றது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜகவினர்  தனித்து போட்டியிட்டு வெற்றிபெற முடியுமா?.”எனக் கேள்வி எழுப்பினார்.