×

வெறுப்பை தூண்டும் ட்வீட்.. பாஜக தலைவர் வினோஜ் மீது வழக்கு - கைதுசெய்ய ஹைகோர்ட் தடை! 

 

ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள கோயில்கள் இடிக்கப்படுவது தொடர்பாக தமிழ்நாடு பாஜக இளைஞரணி தலைவரான வினோஜ் பி.செல்வம் டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அவரது பதிவு உண்மைக்கு மாறான தகவலுடனும், வதந்தியை பரப்பி, இரு பிரிவினரிடையே வெறுப்பு மற்றும் பகைமையை உருவாக்கி, பொது அமைதியை குலைக்கும் வகையில் உள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் புகார் அளித்திருந்தார்.

அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீஸார், வினோஜ் பி. செல்வம் மீது கலகத்தை ஏற்படுத்துதல், இரு சமூகத்தினர் இடையே விரோதத்தை தூண்டுதல் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி வினோஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். செய்தித்தாளில் வந்ததை டிவிட்டரில் பதிவிட்டதாகவும், கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் பாஜகவிற்கு பரப்புரை செய்யும் வகையிலேயே பதிவிட்டதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரியதால் வழக்கை பிப்ரவரி 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை வினோஜை கைது செய்யக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளார். நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அமைச்சர் சேகர்பாபுவை எதிர்த்து துறைமுகம் தொகுதியில் வினோஜ் பி. செல்வம் போட்டியிட்டு தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.