×

அதிகாரியை மிரட்டியதாக புகார்.. கடம்பூர் ராஜு மீதான வழக்கு தள்ளுபடி!

 

கடந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. கோவில்பட்டி தொகுதியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு போட்டியிட்டார். அந்தச் சமயம் கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி தேர்தல் பறக்கும் படை தலைவர் மாரிமுத்து தலைமையிலான குழுவினர் மார்ச் 12ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அமைச்சராக இருந்த கடம்பூர் ராஜு சென்ற வாகனத்தையும் நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். இதனால், கடம்பூர் ராஜுவுடன் சென்றவர்களுக்கும், பறக்கும் படையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக பணியில் இருந்த தன்னை மிரட்டியதாக மாரிமுத்து அளித்த புகாரில் தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், காவல்துறை விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடம்பூர் ராஜு சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. 

அவரது மனுவில், வாகன சோதனையின்போது வாகனத்தை நிறுத்தி, கீழே இறங்கியதுடன், வாகனத்தை முழுமையாக சோதனை செய்ய ஒத்துழைத்ததாகவும், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், மனுதாரர் கோரிக்கையை ஏற்று வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.